மாணவனின் சடலம் நாவற்குடா கடற்பரப்பில் மீட்பு

(கிருஸ்ணா)

கல்லடி கடலுக்கு குளிக்கச் சென்றபோது காணாமல்போன மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஜெகநாதன் டிலுஷ்காந்த் (வயது16) என்ற மாணவின் சடலம் நாவற்குடா பகுதியில் இன்று கரையொதுங்கியுள்ளது.

இம்முறை 2012ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் குறித்த மாணவன் நேற்றுக் (28) காலை தனது நண்பர்கள் 06 பேருடன் கல்லடி கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் நீரில் மூழ்குவதைக்கண்டு அவனைக்காப்பாற்ற டிலுஷ்காந்த் முனைந்துள்ளார்.

தனது நண்பனை காப்பாற்றிவிட்டு திரும்ப முனைந்த போது அலை பலமாக வீசியதால் அவர் அலையால் அடித்துச்செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நாவற்குடா கடற்பரப்பில் குறித்த மாணவனின் சடலம் கரையொதுங்கியதை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.