மகிந்த சிந்தனை மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேசத்திற்கு மாத்திரம் இல்லையா ஐயப்பாடு தோன்றுகின்றது


(Sivam)
மட்டக்களப்பு, மண்முனையில் உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும், உரிமைகோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்ற போதும் இன்னும் அப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும், அகழ்வாராட்சி செய்வதுடன், குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலை நாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப் பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


மகிந்த சிந்தனை மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்திற்கு மாத்திரம் இல்லையா என்ற ஐயப்பாடு தோன்றுவதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மகிந்த சிந்தனையின் ஓர் அம்சமாக காணப்படும் புரதான பொருட்களையும், இடங்களையும் பேணிப்பாது என்ற உயரிய சிந்தனை மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்தில் மாத்திரம் பேணப்படாமல் இருப்பது ஏன் என்கின்ற ஐயப்பாடு எமக்கு தோன்றுகின்றது.

அதிகாரிகளின் தாமதமா அல்லது அரசியல் வாதிகளின் அழுத்தமா என்பதனை தற்போது வெளிப்படையாக தெளிவு படுத்த வேண்டும் என்பதனை அரசாங்க அதிபராகிய தாங்களே தெளிவு படுத்த வேண்டும் என்பதனை கோரி நிற்கின்றேன்.

சுமார் கி.பி. 312ம் நூற்றாண்டில் இந்திய ஒரிஷா மானிலத்தில் இருந்து புத்த தாதுவினையும், சிவலிங்கத்தினையும் கொண்டு வந்த சிற்றரசி உலக நாச்சியும் அவரது சகோதரரும், பொலநறுவையில் புத்த தாதுவினை கொடுத்து விட்டு தனது பரிபாரங்களுடன் ஆரையம்பதி சிகரம் பகுதியில் காடு வெட்டி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தினையும் அமைத்து பூஜை புரிந்து வந்த வேளையில் கொக்கட்டிசோலையில் கொக்கட்டி மரத்தில் இருந்து இரத்தம் வெளிவரவே அங்கு விஜயம் செய்து கொக்கட்டிச்சோலை  ஸ்ரீ தான்தோன்றீ ஈஸ்வரர் ஆலயத்தில் பந்தலிட்டு வருடா வருடம் பூஜை புரிந்து வாழ்ந்து வந்ததோடு வருடாந்த உற்சவங்களுக்காக கி.பி. 312ம் நூற்றாண்டு அளவில் தன்னால் அமைக்கப்பட்ட ஆரையம்பதி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பூஜைப் பொருட்களையும் திருசூலத்தினையும் கொண்டு செல்வதனை வழக்கமாக்கியும் இருந்தார்.

இன் நடைமுறை இதுவரையும் உள்ளது. அதாவது காசிலிங்கேஸ்வரர் ஆலயம் போத்துக்கீசர் படையெடுப்பில் உள்ளடக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீ ஈஸ்வரர் ஆலயத்திற்கு திருசூலம் எடுத்துச் செல்வதும் வடம் புஸ்ரீட்டுவதும் ஓர் சம்பிரதாயமாக நடை பெற்று வருகின்றது.

போன்ற பல ஆதாரங்களை சுட்டிக் காட்டிய போதும் இதுவரை இப்பகுதியினை அகழ்வாராட்சி செய்யவோ, புராதான இடமாக பிரகடனப் படுத்தவே ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் எம்மால் உணர முடியவில்லை என்பதனை மன வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இவ் உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும், உரிமைகோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்ற போதும் இன்னும் இப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடை பெற்று வருகின்றது. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும், அகழ்வாராட்சி செய்வதுடன் 1988ம், 1989ம் வருடப் பகுதியில் குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலை நாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப் பிரதேசத்தினை புராதான புனித பிரதேசமாக பிரகடனப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த 29.11.2013ம் திகதியிடப்பட்ட ஆரையம்பதி ஆற்றல் பேரவையினால் பொது அமைபை;புக்கள் சார்பாக தங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை சுட்டிக் காட்டுகின்றேன்.