பெரியகல்லாற்றில் வான் துவிச்சக்கர வண்டி விபத்து. ஒருவர் படுகாயம்.

( ரவிப்பரியா )
வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் பொது நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வான்
துவிச்சக்கரவண்டி விபத்தில் துவிச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்தவர் படுகாயமடைந்துள்ளார். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

கல்முனையில் இருந்து வந்த சிறிய ரக வேன் (பிடி6363) ஒன்று துவிச்சக்கர வண்டியில், மோதியதால் துவிச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்த காளிகோயில் வீதியைச் சேர்ந்த 50 வயதான ரி.இராஜேந்திரன் என்பவர் தலையிலும் முகத்திலும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிகச் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இவரின் மார்புப் பகுதியில் வீக்கம் காணப்படுகின்றது.

வானின் முன் கண்ணாடி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், துவிச்சக்ககர வண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிசார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.