பாடசாலை பேண்ட் வாத்தியக் கருவிகளுக்குத் தீவைப்பு!

(சுழற்சி நிருபர்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்- மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தின் பேண்ட் வாத்தியக் கருவிகள் இருந்த அறை தீயினால் நாசமாக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை 25.07.2014 அதிகாலை 1.45 மணியளவில் தனது பாடசாலையில் பேண்ட் வாத்தியக் கருவிகள் மற்றும் பேண்ட் சீருடைகள் வைக்கப்பட்டிருந்த அறை தீ வைக்கப்பட்டு முற்றாக நாசமாக்கப்பட்டிருப்பதாக மாக்கான் மாக்கார் வித்தியாலய அதிபர் எம்.எம். முஹைதீன் தெரிவித்தார்.

சுமார் மூன்றரை இலட்ச ரூபாய் பெறுமதியான வாத்தியக் கருவிகளும் சீருடைகளும் தீயினால் அழிந்து போயுள்ளதாக அவர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்தலத்தில் குற்றச் செயலை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரிகளும் (SCENE OF CRIME OFFICER) மட்டக்களப்பிலிருந்து வந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறாவூர்- மாக்கான் மாக்கார் வித்தியாலயம் இவ்வாண்டுக்கான பேண்ட் வாத்தியக் குழுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முதலாமிடத்தைப் பெற்று கிழக்கு மாகாண ஆளுநர் விருதைத் தக்கவைத்துக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.