ஆழ்கடலில் காணாமற்போன இருவரில் ஒருவர் கரை திரும்பவில்லை; மது அருந்தி சண்டையிட்டதாகவும் தகவல்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீனவர்களில் ஒருவர் இன்னும் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

படகொன்றில் மூன்று மீனவர்கள் நேற்றிரவு கடலுக்குச் சென்றிருந்த நிலையில் ஒருவர் மட்டும் கரைக்குத் திரும்பியபோது, அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து படகில் சென்ற ஏனைய இரண்டு மீனவர்களையும் காணவில்லை என படகின் உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்திருந்தார்.

ஆயினும், காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு மீனவர்களில் ஒருவர் மற்றுமொரு படகின் உதவியுடன் இன்று நண்பகல் அளவில் கரை திரும்பியுள்ளார்.

அவரையும் வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடலுக்குச் சென்று இந்த மூன்று மீனவர்களும் மதுபானம் அருந்தியதாகவும், அவர்களில் இருவர் சண்டையிட்டதாகவும் பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமற்போன மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்றிரவு கரைக்கு திரும்பியபோது கைதான மீனவர் வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, இன்று நண்பகல் கரைக்குத் திரும்பிய மீனவரிடம் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.