வீதியால் சென்ற பெண்ணை தாக்கி தங்க சங்கிலி அபகரிப்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரை தாக்கி மூன்று பவுண்  தங்க சங்கிலியை அபகரித்து சென்ற சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்ததாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.எல்.ஏ. றஸீட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த நபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

 தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள தனது மகனின் வீட்டுக்கு வீதியால் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியால் துவிச்சக்கர வண்டியில் வந்த நபரே பெண்ணை தாக்கி விட்டு மாலையை அபகரித்து சென்றுள்ளார். அபகரிக்கப்பட்ட மாலையை கடந்த 6ஆம் திகதி விற்பதற்காக நகைக் கடைக்கு சென்ற மேற்படி சந்தேக நபரின் மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.