ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சமாகும் ! இவ்வளவு பாரிய தொகை தேவைதானா?


ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சமாகும். இவ்வளவு பாரிய தொகை தேவைதானா?

இன்று இலங்கைக்கான வெளிநாட்டுச் சேவையில் அரசியல் நியமனங்களாக கையாலாகாத அதிகாரிகளே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அபிவிருத்தி என்ற பெயரில் பொதுப்பணம் விரையம் செய்யப்படுகிறது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் சங்கைக்குறிய மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.

சில இடங்களில் கடல் அகழ்ந்தும் இன்னொறு இடத்தில் கடல் நிறப்பப்பட்டும், தரையில் கட்டப்பட வேண்டிய கடைகள் தண்ணிரில் மிதக்க விடப் பட்டும் வருகிறது. இப்படி தேவையில்லாத செலவாக பாரிய தொகைப் பணம் விரையம் செய்யப்படுகிறது. ஜனாதிபதி முறையில் எதனையும் எவரிடமும் கேட்டுச் செய்யத் தேவையில்லை.

கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற அரசியல் அமைப்பு தொடர்பான ஒரு விழிப்புணர்வுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

போதைப் பொருளில் தன்னிறைவு கண்டுள்ள எமது நாட்டில் விவசாயம் தொடர்பான துறைகளுக்கு 23 அமைச்சர்கள் இருந்தும் அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. நாட்டின் குடி மக்களாகிய எமக்கு நீதி, நியாயம் சட்டம், நேர்மை போன்ற ஜனநாயக அடிப்படைகள் தேவைப்படுகின்றன. இவற்றை வழங்குகின்ற அடிப்படைக் கூறாகிய எமது அரசியல் அமைப்பில் அவை இருந்தும் கூட கடந்த 35 வருடமாக எமது அரசியல் அமைப்பு மூலம் நாம் சலித்து விட்டோம்.

மறைந்த ஜே.ஆர்.ஜயவர்தன 1978ம் ஆண்டு அரசியல் யாப்பை கொண்டு வரும் போதே சில உரிமை மீறல்களுடனும் ஏதேச்சாதிகாரத்துடனும் அதனை முன்வைத்தார். அதில் அன்று முதல் இன்று வரை ஜனநாயக ரீதியான குறைபாடுகள் உள்ளன. அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட்ட
நேரத்தில் ஆளும் தரப்பு அனைத்து பாராளுமன்ற அங்கத்தவர்களதும் இராஜினாமாக்க கடிதங்களை ஜே.ஆர். பெற்றிருந்தார். அதன் ஆரம்பம் அதுவென்றால் முடிவும் அப்படித்தான் இருக்கும்.

ஆனால் இன்று அனைத்து சமூகங்களும் ஒரு கருத்தின் கீழ் வந்துள்ளன. சம்பந்தர் தலைமையிலான கூட்டணி, அஸாத் சாலி மற்றும் மனோ கணேசன் உற்பட இதர தலைவர்களும் எமது திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி முறை ஒழிக்கப் படும் என்பது மகிந்த சிந்தனையில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எல்லாத் தரப்பும் ஏற்றுக் கொண்ட போதும் அதனை நிறைவேற்ற எவரும் முன் வருவதில்லை. எனவே ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான சரியான வேலைத்திட்டத்தின் அடிப்படையிலே சில ஆலோசனைகளை முன்வைக்க உள்ளோம்.

தற்போதைய பாராளுமன்றத்தில் ஆரம்பகாலத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி அதனை பின்னர் உருவாக்கிக் கொண்டார்.
இன்று இலங்கையில் அதி கூடிய விலைக்கு விற்கப் படுகின்ற ஒரு வர்த்தகப் பண்டமாக பாராளுமன்ற அங்கத்தவர் பதவி உள்ளது. அந்த அடிப்படையில் மூன்றில் இரண்டிற்குத் தேவையானவர்கள் விலைகொடுத்து வாங்கிக் கொள்ளப்பட்டார்கள்.


ஜனாதிபதிக்கான ஒருநாள் செலவு 234 இலட்சமாகும். இவ்வளவு பாரிய தொகை தேவைதானா? இன்று இலங்கைக்கான வெளிநாட்டுச் சேவையில் அரசியல் நியமனங்களாக கையாலாகாத அதிகாரிகளே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இலங்கை பற்றிய பிரதி விம்பத்தை சர்வதேச ரீதியில் உருவாக்க அமேரிக்க கம்பணி ஒன்று குத்தகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் தேட வேண்டிய ஒரு முறையாக விகிதாசாரத் தேர்தல் முறை மாறி விட்டது,

அதிகாரிகள் ஜனாதிபதிக்கு சார்பாக முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். மிஹின் லங்கா, மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்றவை ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபா வரை நட்டத்தை ஏற்படுத்துகின்றன.

ஜனாதிபதி முறையில் எதனையும் எவரிடமும் கேட்டுச் செய்யத் தேவையில்லை. உதாரணத்திற்கு பாலஸ்தீனுக்கு ஒரு மில்லியன் டொலர் கொடுக்க எவரிடமும் கெட்கவில்லை. இதேபோல் முன்னைய ஆட்சியில் இந்திய அமைதிகாக்கும் படையை இலங்கைக்கு அழைக்க எவரிடமும் அனுமதி கோர வில்லை. இவ்வாறு பொறுப்புக் கூறத் தேவையிலாத ஒரு அமைப்பு முறை ஒழிக்கப்பட்டு பொறுப்புக் கூறும் பராளுமன்ற முறை ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்றார்