தவறவிட்ட 3 பவுண் தங்கம் மற்றும் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மூன்று பவுண் தங்கம் மற்றும் ரூபாய் 38,560 பணத்தை கண்டெடுத்த பெண் ஒருவர் அவற்றை வாழைச்சேனை பொலிஸில் செவ்வாய்கிழமை (19) ஒப்படைத்துள்ளார்.

கல்மடு வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.சகுந்தலா என்ற பெண் வாழைச்சேனை இலங்கை வங்கிக்கு தனது தேவையின் நிமித்தம் முச்சக்கரவண்டியில் சென்றபோது   மூன்று பவுண் மதிக்கத்தக்க தங்கமாலையையும் ரூபாய் 38,560 பணத்தையும் கொண்ட தனது கைப்பையை தவற  விட்டுள்ளார்.


குறித்த முச்சக்கரவண்டியில் ஏறிய வாழைச்சேனை அறபா வீதியைச் சேர்ந்த எம்.ஐ.மசாகிரா என்ற பெண் முச்சக்கரவண்டியில் இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

இதே வேளை தனது பணமும் தங்க மாலையும் தொலைந்து விட்டதாக கைப்பையின் உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சென்றவேளை, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தங்கம் மற்றும் பணம் ஆகியவை இவருடையது என்று உறுதிசெய்து, அவற்றை உரிமையாரிடம் கையளித்ததுடன் கைப்பையை கண்டெடுத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்ணை பொலிஸார் பாராட்டினர்.