ரி.எம்.வி.பி.யின் முன்னாள் முக்கியஸ்தரின் தாயாரது வீடு, இனந்தெரியாத நபர்களால் தீக்கிரை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர் சீலனின் தாயாரது வீடு, இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி  ஆலயத்தின் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளரான விநாசித்தம்பி புவனேஸ்வரி முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.



இதனை அடுத்து பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தடயங்களை ஆராயும் வகையில் அம்பாறை குற்றத்தடுப்பு புலனாய்வு பொலிஸ் பிரிவினரினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீடு, ஏற்கெனவே 2004ஆம் ஆண்டில் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டு வீட்டின் பெரும் பகுதி தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.