மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி, மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் படுகாயம்!

(சுழற்சி நிருபர்)

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை 19.08.2014 காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பெண் வீதியைக் கடந்து தனியார் பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்திற்குச் செல்ல முற்பட்டபோது அவ்வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது.

வெல்லாவெளியைச் சேர்ந்த எஸ். சந்திரகலா (வயது 42) என்பவரே கொல்லப்பட்டவராகும்.
படுகாயமடைந்த பெண்ணை உடனடியாக அருகிலிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் அவரைக் காப்பாற்ற முடியாமற் போயுள்ளது என்று வைத்திய சாலையில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரான பழுகாமத்தைச் சேர்ந்த சண்முகம் மோகன் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.