மாவட்ட விளையாட்டு விழா, தேசிய மட்ட வீரர்கள் கௌரவிப்பு

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் மாவட்ட விளையாட்டு விழாவும் தேசிய மட்ட வீரர்கள் கௌரவிப்பும் எதிர்வரும் சனிக்கிழமை (23) அன்று மகிழடித்தீவில் நடைபெறவுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம் பெறும் மாவட்ட விளையாட்டு விழாவும் தேசிய மட்ட வீரர்கள் கௌரவிப்பும் நிகழ்வில், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட உத்தியோகத்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்விழாவில், தடகள போட்டிகளான ஆண்கள் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டம், 1500 மீற்றர் ஓட்டம், 100 மீற்றர் அஞ்சல் ஓட்டம், மண்முனை வடக்கு மற்றும் ஏறாவூர் நகர் ஆகிய பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளது.

அத்துடன், தேசிய மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளைக் காண்பித்த வீரர்கள் கௌரவிப்பு, உத்தியோகத்தர்களுக்கான போட்டிகளும் இடம் பெறவுள்ளன. 

பிரதேச செயலக ரீதியில் இவ்வருட ஆரம்பம் முதல் நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் மாவட்டரீதியான போட்டிகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட விளையாட்டு விழாவில் பரிசில்களும் இந் நிகழ்வில் வழங்கப்படும்.

மாவட்ட மட்ட நிகழ்வுகளை பிரதேசங்களிலும் நடத்துதல் என்ற அடிப்படையில் இவ்வருடம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மகிழடித்தீவில் மாவட்ட விளையாட்டு விழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.