நீர் நிரம்பிய வாளிக்குள் தலை கீழாக விழுந்து குழந்தை பலி

(ஏறாவூர் அபூ பயாஸ்)
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி தமிழ் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக மரணித்துள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

திருமால் பவித்திரன் என்ற குழந்தையே, தனது வீட்டு குளியலறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியினுள் தலை கீழாக விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

குளியலறையில் உடுப்புகள் கழுவிக்கொண்டிருந்த இக்குழந்தையின் தாயாரர் தனது ஒரு மாத வயதையுடைய மற்றக் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதற்காக குளியலறையை விட்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் தாயைத் தேடி இக்குழந்தை குளியலறைக்கு வந்தபோதே  தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்துள்ளது. இக்குழந்தை நீர் நிரம்பிய வாளிக்குள் தலை கீழாக விழுந்து கிடப்பதை இவரது சகோதரியின் ஐந்து வயதுச் சிறுவன் கண்டு விட்டிலிருந்தவர்களிடம் கூறியுள்ளான்.

அதன் பின்னர் தாய் ஓடிச்சென்று குழந்தையை நீர்வாளியிலிருந்து வெளியே எடுத்த பொழுது குழந்தை மூர்ச்சித்துப் போய் இருந்துள்ளது.
உடனடியாக அருகிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் செல்லும் போது வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.