தாதி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள முகத்துவாரம், பாலமீன்மடு கிராம வீடொன்றிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதி உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமீன்மடு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த தியாகராஜா தருண்ராஜ் (வயது 32) என்ற தாதி உத்தியோகத்தரின் சடலமே இன்று புதன்கிழமை (20.08.2014) பகல் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.


இவர் தனது படுக்கையறையில் சடலமாகக் கிடப்பதாக உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இவர் கடமை முடிந்து வீடு செல்லும்போது நாளைய தினத்திற்குப் பின்னர் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள் என்று சக உத்தியோகஸ்தர்களிடம் தெரிவித்து விட்டு வந்ததாக உறவினர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.