தமிழ் மக்கள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயற்பட்டால் பாரிய அபிவித்திகளை கொண்டுவர முடியும்

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட்டால்; பாரிய அபிவிருத்திகளை நேரடியாக அனுபவிக்க முடியும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரரும் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தாமோதரம் உதயஜீவதாஸ் தெரிவித்துள்ளார்.

சந்திவெளியில் நடைபெற்ற தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினை தலைமையேற்று உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

“விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்துடன் இணைந்து பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளது.

எமது பிரதேச இளைஞர் யுவதிகள் சுதந்திரமாக வாழக்கூடி ஒரு சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி பதவியைப் பொறுப்பெடுத்ததன் பின்னர்தான் அபிவிருத்திகள் நேரடியாக எமது மாவட்ட மக்களை நேரடியாகச் சென்றடைந்துள்ளன. அதனடிப்டையில் இன்று தானும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டுள்ளேன்.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்பு எமது பிரதேச மக்களின் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாத்திரமே எமது மக்களினுடைய அபிவிருத்திகளை நேரடியாகக் கொண்டுவர முடியும் என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வரும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்து பல துன்ப துயரங்களை அனுபவித்துள்ளனர் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் நாங்கள் அனைவரும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.