மட்டக்களப்பில் பெரு மழை! ஆற்றில் வெள்ளப்பெருக்கால் முடங்கிய போக்குவரத்து


(த.லோகதக்சன் & எஸ்.சதீஸ், வரதன் ) மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக பல வீதிகள் நீரினால் மூடப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு புதூர் விமானப் படை தளத்திற்கு முன்பாக உள்ள ஆறு பெருகியமையால் ஆறுக்கு இடையாக செல்லும் வீதியில் நீர் ஊடறுத்துச் செல்வதால் பிரயாணம் பெரும் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இவ்வீதியால் பயணத்தை மேற்கொண்டு மட்டக்களப்பு நகருக்கு செல்ல வேண்டும். ஆகையால் இவ்வீதியால் தொழிலுக்கு மற்றும் கல்வி கற்பதற்கும், சந்தைக்கும், ஏனைய தேவைகளுக்கும் செல்ல வேண்டி காணப்படுகின்றது.

இதன்போது இவ்வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்குள் நீர் பாய்ந்ததால் பல வாகனங்கள் செயழிலந்த நிலையில் காணப்பட்டு, பின்னர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அதனை இயக்க வைத்து செல்கின்றது.

இவ்வீதியானது பள்ளமாக காணப்படுகின்றது. இவ்வீதியை உயர்த்தி இரு பக்கமும் அணையை கட்டி சீர் செய்து தந்தால் தங்களுக்கு மழை காலத்தில் எவ்வித இடையூறும் இன்றி பயனம் செய்;ய ஏதுவாக இருக்கும் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பயணிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

அத்தோடு மட்டக்களப்பு தனியார் பஸ்களை நிறுத்தும் இடத்திற்கு பின்னால் உள்ள ஆறு பெருகியமையால் ஆற்று நீர் தனியார் பஸ் நிறுத்தும் இடத்திற்குள் சென்றமையால் அவ்விடம் ஆறு போன்று காணப்படுகின்றது.

இதனால் பஸ் நிறுத்துவதற்கு தனியார் பஸ் நடனத்துனர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் உள்ளனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நீர் தரிப்பு நிலையத்திற்கு நீர் வராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனியார் பஸ் நடத்துனர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.