மட்டக்களப்பில் ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம்! பொலிஸார் தடியடி


 (நித்தி,சிவம்,பே.சபேஷ் & எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில்  மாலை  நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருந்த போது மைதானத்துக்கு வெளியில் பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி சுமணரட்ண தேரர் தலைமையிலான குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக் குழுவினரை கூட்டம் நடைபெறும் மைதானத்துக்குள் செல்ல முடியாதவகையில் மைதானத்தின் பிரதான வாயிலை பாதுகாப்புப் படையினர் இழுத்து மூடினர்.

புழுக்குணாவ மற்றும் கெவுளியாமடு  மக்களின் அடிப்படைப் பிரைச்சினைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கச் செல்கிறோம் என விஹாராதிபதி அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை படையினர் மைதானத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

விஹாராதிபதியை உள்ளே செல்ல முடியாமல் தடுத்த பாதுகாப்புப் படையினர், ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள மகஜரை தங்களிடம் வழங்குமாறு கோரி மகஜரைப் பெற்றுக்கொண்டனர்.

அதனையடுத்து ஆர்ப்பாட்ட காரர்கள் வீதியை மறித்து தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் இதற்கிடையில் விஹாராதிபதிக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக  ஆர்ப்பாட்டகாரர்கள் மீது பொலிஸார் தடியடிப்பிரயோகம் மேற்கொண்டனர் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில், பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையை முடித்துகொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.

ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியை ஆதரித்து போடப்பட்ட பதாதைகளையும் உடைத்து சேதப்படுத்தினர்.