வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்து இளைஞர் பேரவையால் நிவாரண உதவி

(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு நொச்சிமுனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவினரால் சமைத்த உணவு சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதி தற்போது பெய்த மழை காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகியதுடன், வீடுகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதுடன், பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதேசம் நீரில் மூழ்கியமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டமை காரணமாக வீட்டிற்குள் நீர் புகுந்தமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது யாத்திரைக் குழுவினரால் அங்கு பாதிக்கப்பட்ட இருநூறு மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் பாண் என்பவற்றை கிராம உத்தியோகத்தர் மற்றும் மாதர் சங்கத் தலைவி திருமதி.எஸ்.வேவி ஆகியோரிடம் கையளித்தனர்.

உணவு வழங்கி வைக்கும் போது அதன் உப தலைவர் வ.நவநீதன், உப செயலாளர் க.நவரெத்தினம், செயலாளர் ந.குகதர்சன், உறுப்பினர்களான சொ.ரதன், க.சஞ்ஜீவன், சு.மனோஜ், க.யோகராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இவ்உதவியை புரிந்த மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழுவினருக்கு பொதுமக்கள் சார்பாகவும், மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்தனர்.