போட்டியில் பங்கு பற்றுவோருக்கே ஊக்கமளிக்கப்படுகிறது அதனை பார்த்து ரசிப்போருக்கு இல்லை – த.வசந்தராஜா

ஓட்டப்போட்டியைப் பார்த்திருப்பீர்கள்;. அங்கே யாருக்கு குழுக்கோஸ் கொடுக்கப்படுகிறது? ஓட்டத்தில் பங்கு பற்றுவோருக்கே குழுக்கோஸ் கொடுக்கப்படுகிறது  அதனைப் பார்த்து ரசிப்போருக்கு அல்ல. அதே போன்று யார் முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்கே உதவிகளும் ஊக்குவிப்புக்களும் வந்து சேருகின்றன. எனவே வெளியுதவிகளும் ஆதரவும் யாருக்கு தேவையோ அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை உயர்த்திக் கொள்ள முயலுதல் வேண்டும். அப்போதுதான் வெளியாரின் ஆதரவு கிடைக்கும். வெறுமனே இருந்து கொண்டு மற்றோரைக் குறை கூறவதனால்; எப்பயனும் விளையப் போவதில்லை.

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கோவில்க்குளம் கிராமத்தில் சிகரம் சமூக அபிவிருத்தி அமைப்பினால் மக்களின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டமிடலின் போது அங்கு முதன்மை வளதாரியாகக் கலந்து கொண்டிருந்த த.வசந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் உதவிகளையும் பிறருடைய தயவையும் நாம் தேடி அலைந்து நீங்கள் உங்கள் காலத்தையும் நேரத்தையும் வீண் அடிக்கக்கூடாது. அயலார் உங்களை  தேடிவரும் வண்ணம் உங்களை நீங்கள்; ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள், கடுமையாக முயற்சி செய்யுங்கள், மிக்க்கடுமையாக முயற்சி செய்யுங்கள் உலகமே உங்களை நாடி வரும் என்றார்

கோவில்குளம் கிராமத்தின் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய கிராமிய அபிவிருத்தித் திட்டமிடல் நிகழ்வில் கோவில்குளம் கிராம மக்கள் மற்றும் சிகரம் நிறுவனத்தின் இணைப்பாளர் எம். எல். எம். றிஸ்லி களப்பணியாளர் செல்வி. எஸ்.வினோதா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.