'பைகளினுள் இருந்த பணம் இன்று மக்களின் கைகளில்' - மட்டக்களப்பில் ரவி கருணாநாயக்க

கடந்த ஆட்சியில் ஒரு சிலரின் பைக்குள் பணம் இன்று மக்களின் கைகளுக்குள் வந்துள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க
(சுழற்சி நிருபர்)
கடந்த ஆட்சியில் ஒரு சிலரின் பைக்குள் பணம் இன்று மக்களின் கைகளுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் நாடு அபிவிருத்தி காணப்போகின்றது என இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு களுவன்கேணிக் கிராமத்திற்கு வந்து வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஏறாவூர்ப் பற்று வர்த்தக சங்கத் தலைவரும் நிதியமைச்சரின் இணைப்பாளருமான கே. மோகன் தலைமையில் களுவன்கேணி வீதியில் கூட்டம் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்
இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் அபிவிருத்தி கிடைக்கக் கூடியவாறு நீங்கள் இந்தப் புதிய அரசைத் தெரிவு செய்;ததால் நான் நிதி அமைச்சராக வந்துள்ளேன்.
ஏகாபத்தியத்திலிருந்து விடுபடுபடுவதற்காக நீங்கள் எடுத்த இந்த முடிவின் பிரகாரம்  புதிய ஜனாதிபதின் தலைமையின் கீழ் நாடு ஒன்றுபட்டுள்ளது.
அதன்காரணமாக நான் நாட்டு மக்களுக்கெல்லாம் நன்மை தரக்கூடிய புதிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க முடிந்ததால் அதன் மூலம் நீங்கள் இன்று நன்மைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
காலாகாலமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த களுவன்கேணி வீதி காபெற் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு கோடி 30 இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 வருடகாலமாக செய்ய முடியாமற் போன அபிவிருத்தித் திட்டங்களை நாம் வெறும் 29 நாட்களிலேயே செய்ய ஆரம்பித்துள்ளோம். இது கடந்த காலத்தில் மக்களை ஏமாற்றியவர்களுக்கு ஆச்சரியத்தைத் ஏற்படுத்தியுள்ளது.
கண்டு கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருந்த நாட்டின் எல்லா மூலை முடுக்களிலும் பாரிய அபிவிருத்திகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் விட காத்திரமான அபிவிருத்திகளைச் செய்வதற்கு எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலே ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து அபிவிருத்தியின் சகல நன்மைகளையும் நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று உங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.