100 நாள் திட்டத்தில் வெபர் மைதான வேலைகள்

180 மில்லியன் ரூபா செலவில் நவீனமுறையில் புனரமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவுக்குக் கொண்டு வர விளையாட்டுத்துறை அமைச்சுநடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் படி வேலைகளை விரைவு படுத்தும் வகையிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) காலை அமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தைப் பார்வையிட்டு நிறைவடைந்துள்ள வேலைகள், இன்னமும் பூர்த்தி செய்யப்படாதவைகள் குறித்து கலந்துரையாடினர்.
இந்தக்குழுவில் பொறியலாளர்கள், அதிகாரிகள் அடங்கியிருந்தனர்.
அமைச்சின் குழுவினர் பொலநறுவை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் விளையாட்டுத்துறை தொடர்பில் நடைபெற்று வரும் விளையாட்டுத்துறை தொடர்பிலான வேலைகளைப் பார்வையிடவுள்ளனர்.
நிர்மாண வேலைகள் நடைபெற்றுவரும் வெபர் விளையாட்டரங்குக்கு விஜயம் செய்த அதிகாரிகள் குழுவினர் மைதானத்தின் நிர்மாண வேலைகள் குறித்து பொறியியலாளர்கள் ஒப்பந்தகாரரான பி.சசிகுமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.
அத்துடன், மைதானத்தின் வேலைகளை விரைவுபடுத்துமாறும் அதற்கான தேவைகள் ஆலோசனைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக இவ் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.
வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட் டக்கூடம், உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்ட கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் வெபர் மைதானம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் அது மாநகர சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.