கூட்டுக் கட்சிகளின் தேசிய அரசாங்கத்தில் இலங்கை
தமிழரசுக்கட்சியே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும்.
நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு அமைய சம்பந்தன் மட்டுமே
எதிர்க்கட்சி தலைவருக்கு மிகப்பொருத்தமானவர்
சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்கினால் பூரண
ஒத்துழைப்பினை வழங்கி ஆதரிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அந்தக்
கட்சி அறிவித்துள்ளது.
தேசிய அரசாங்கத்தின் கூட்டணி ஆட்சியில்
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி
எழுப்பப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் நிலைப்பாட்டினை வினவிய போதே அக்கட்சியின் பொது
செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி மேற்கண்டவாறு
தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில் ஜனநாயகம் ஓரளவேனும்
பலப்பட்டிருக்கின்றது. சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு
ஜனாதிபதியும் பிரதமரும் முன்னுரிமை வழங்கி செயற்படுகின்றனர்.
எனினும் பாராளுமன்றத்தில் இனவாத பிரதிநிதிகள் இன்னும் செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் இன்றைய நடைமுறைச்
சூழ்நிலைக்கு அமைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இலங்கைத்
தமிழரசுக்கட்சி எதிர்க்கட்சியாக வர வேண்டும். சிறுபான்மை
கட்சிகளை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற நினைக்கும் ஒருசில
சிங்கள கட்சிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் சிறுபான்மை
தலைமைகளுக்கான அங்கீகாரத்தினை வழங்கவும் இது நல்லதொரு
சந்தர்ப்பம். அதேபோல் இன்று பாராளுமன்றத்தினை
பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மிகவும் அனுபவம்
மிக்கவரும் இனவாதத்தினை பேசாத ஒரே தலைவரும் சம்பந்தன் மட்டுமே
ஆவார்.
மேலும் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பிற்கு
மிகவும் பொருத்தமானவர். சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு
தீர்வு எட்டவும் நாட்டின் தேசிய ஒற்றுமையினை கட்டியெழுப்பவும்
இவ்வாறான தீர்மானங்கள் வெற்றியளிக்கும். அதேபோல் இனவாத
செயற்பாடுகளில் இருந்து விடுபட வேண்டுமாயின் தமிழ் தலைவர் ஒருவரை
அதுவும் தற்போதைய பாராளுமன்றத்தில் வாய்ப்புக்கள் அதிகமாக
இருக்கின்ற சம்பந்தனை நியமிக்க வேண்டும். இலங்கை வரலாற்றில் தமிழ்
தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக கடமையாற்றியுள்ளார்.
அதன் பின்னர் ஏற்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பமே இது. எனவே அதனை
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனை
சபாநாயகர் நியமிப்பாராயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது பூரண
ஆதரவினை வழங்க தயாராக உள்ளது. அதேபோல் சம்பந்தன் கூட்டணியுடன் இணைந்து
ஒத்துழைப்புடன் செயற்படவும் தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.