சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவரில் ஒருவர் கைது அடுத்தவர் தலைமறைவு

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  இருவருள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்தவர் தலைமறைவாகியிருப்பதாகவும் அக்கறைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் அக்காவுக்கு டெங்கு காய்ச்சல் காரணமாக அக்கரைப்பற்று ஆதரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்காவுக்கு உதவிக்காக கடந்த திங்கட்கிழமை  சிறுமி வைத்தியசாலையில் இரவு தங்கியிருந்துள்ள நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை திருக்கோவிலிலுள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக அக்கரைப்பற்று பஸ்நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
இதன் போது பஸ் நிலையத்துக்கு சென்ற சம்பூர்நகர் பிரதேசத்தில் திருமணம் முடிந்த அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் சென்று அச்சிறுமியுடன் பேசி எங்கு செல்வது அங்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதாக பல்வேறு ஆசைவார்த்தை காட்டி சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சம்பூர்நகர் பிரதேசத்தில் தனிமையிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு விட்டு சிறுமியை அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டு அவர் தப்பி ஓடியுள்ளார்.


இந்நிலையில் சிறுமி நேற்று புதன்கிழமை வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு சம்பவத்தை தெரிவித்ததையடுத்து பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியைச் சேர்ந்த 22 வயதுடையவரை இன்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பூர்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.