மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 2 பெண்களுக்கு 6 குழந்தைகள் பிரசவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 24 மணித்தியால இடைவெளியில் 2 பெண்கள் 6 குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர்.

கிரான் பகுதியைச் சேர்ந்த பெண்  வெள்ளிக்கிழமை  (17) மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

தன்னாமுனைப் பகுதியைச் சேர்ந்த பெண் நேற்றுமுன்தினம் (16) மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.



ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் வைத்திய நிபுணர் டொக்டர் சித்திரா கடம்பநாதன் தெரிவித்தார்.

இதில் சத்திரசிகிச்சை மூலம் மூன்று பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ள தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் குடும்பம் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பெண்ணின் கணவர் சிறு வயதிலேயே சிறுபிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர்களுக்கு ஏற்கனவே பெண் பிள்ளையொன்று இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், குழந்தைகளை வளர்ப்பதற்காக உதவிகள் எதிர்பார்க்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

எனவே, உதவிகளை வழங்க முன்வருகின்றவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை நாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.