கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சுற்றறிக்கை தனிச் சிங்கள மொழியில்


(பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன் ) கிழக்கு மாகாண கல்வியமைச்சின் இந்த வருடத்துக்கான முதலாவது சுற்றறிக்கை தனிச் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து, ‘கிழக்கு மாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம்’ கண்டனம் தெரிவித்துள்ளது.

‘பொது நிருவாகமும், அது தொடர்பான அறிவுறுத்தல்களும் – உத்தரவுகளும்’ என சிங்கள மொழியில் தலைப்பிடப்பட்ட சுற்றறிக்கையே தமிழ் பேசுவோருக்கு தனிச் சிங்களத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

‘கிழக்கு மாகாண கல்வியமைச்சின் இந்த வருடத்துக்கான முதலாவது சுற்றறிக்கை, இது. இந்த வாரம் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பதில் செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.


இது குறித்து கிழக்கு மாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரிவிக்கையில்,
கடந்த மாகாணசபை ஆட்சியில் கிழக்கு மாகாண கல்வியமைச்சராக சிங்களவர் ஒருவர் பதவி வகித்தபோது கிழக்கு மாகாணக் கல்வியமைச்சு, தமிழ் மொழி மூலப் பிரதேசங்களுக்கு தமிழ் மொழியிலும், சிங்கள மொழிப் பிரதேசங்களுக்கு சிங்கள மொழியிலும், சுற்றறிக்கைகளை அனுப்பி வைத்தது.
ஆனால், கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சியில், தமிழர் ஒருவர் கல்வியமைச்சராக பதவி வகிக்கின்ற நிலையில், தமிழ் பேசுவோரின் மொழியுரிமை மீறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழர் ஒருவர் பதவியேற்ற பின்னர் வெளியிடப்படுகின்ற முதலாவது சுற்றறிக்கை சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் 12 வலயங்கள் தமிழ் மொழி மூலமானவை. 5 வலயங்கள் சிங்கள மொழி மூலமானவை.
இந்த வகையில், தமிழ் பேசுவோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்துக்குரிய கல்வியமைச்சின் செயலாளரொருவர் சிங்களத்தினை மட்டும் பேசத் தெரிந்த, தமிழ் மொழியினை அறவே அறிந்திராத ஒருவராக உள்ளமையானது துர்ப்பாக்கியமானது.

அத்துடன், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக தமிழ் பேசும் ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டுமெனவும் குறித்த சங்கம் வலியுறுத்துகிறது என கிழக்கு மாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரித்தார்