கிழக்கு மாகாண சபையில் தமிழிலும் தேசிய கீதம்

(பேரின்பராஜா சபேஷ்) கிழக்கு மாகாண சபையில் தமிழிலும் தேசிய கீதத்தை இசைத்து நாட்டுக்கு முன்மாதிரி காட்டியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இன்று காலை கிழக்கு மாகாண சபை கூடிய போது தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.


அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து நல்லாட்சிக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்திய கிழக்கு மாகாண சபை, தேசிய கீதத்தை தமிழ் இசைத்து முன்மாதிரி ஒன்றை இன்று வெளிப்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் ஏற்பட்டிருந்த தடங்கலை மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி விடுவித்ததை அடுத்து முதலமைச்சர் நஸீர் அஹமட் இந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இன ஒற்றுமைக்கு வித்திட்டுள்ளார்.

முதலமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இலங்கை நாட்டில் இன்று நல்லாட்சி மலர்ந்துள்ள இவ்வேளையில் குழப்பம் விளைவிக்க சிலர் முன்வந்துள்ளனர். அவர்களின் கீழ்த்தரமான மனப்பாங்குகளை புறந்தள்ளி விட வேண்டும்.;

நாம் சகல இன, மொழி மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். அதன் ஒரு படியாக இன்று கிழக்கில் மொழியால் ஒற்றுமைப்பட்டிருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தை ஏனைய மாகாண மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றியமைக்க என்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இதற்காக அரசியல் வாதிகள், நல்ல சிந்தனையுள்ளவர்கள், மதத்தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் அனைவரும் கைகொடுக்குமாறு அன்பான அழைப்பு விடுக்கிறேன். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்..