வீதி விபத்தில் கார் சுக்குநூறாகியது

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் - கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வீதி மருங்கில் இருந்த மரம் மற்றும் மின்கம்பத்துடன் மோதுண்டு சுக்குநூறாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் தனது மகனைப் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று சொந்த ஊரான பொத்துவிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்ததாக காரில் பயணித்த பொத்துவில் வாசியான எம். அப்துல் கரீம் (வயது 65) தெரிவித்தார்.

தானும் மனைவி பிள்ளைகளுமாக காரில் 5 பேர் பயணித்ததாகவும் எனினும் எவருக்கும் தெய்வாதீனமாக காயங்களோ உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தூக்க மயக்கத்திலேயே கார் வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மரம் மற்றும் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து சம்பவித்ததாக காரைச் செலுத்திச் சென்ற அதன் சாரதியும் உரிமையாளருமான பொத்துவிலைச் சேர்ந்த எம்.எல். ஸஹாப்தீன் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.