முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மீள்வருகைக்கான அறிவித்தல்களும் உறுதியுரைப்புக்களும் சகல தரப்பினரையும் கதிகலங்க வைத்துள்ளது. சிலருக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாகவும் காணப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இப்படியொரு நெருக்கடி நிலையை மக்கள் கேள்விப்படாத அளவுக்கு சர்ச்சைகளும் முரண்பாடுகளும் மோதல்களும் குவிந்துபோன தேர்தலாக இலங்கையின் 15 ஆவது பொதுத் தேர்தல் ஆகிவிட்டது.
இலங்கையின் பிரதமர்களாக இருந்தவர்கள் இன்னுமொரு கால பிரதமர் கதிரைக்கு போட்டியிட்டிருக்கிறார்கள். மந்திரிகள் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றம் சென்றுள்ளனர். மாகாணசபை உறுப்பினர்களாக ஆகியுள்ளனர். ஆனால் நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதியெனும் நாட்டின் உயர்பதவியை வகித்த ஒருவர் பிரதமர் பதவிக்காக படியிறங்கி போட்டியிடும் நிலையை 15 ஆவது பொதுத் தேர்தல் உருவாக்கி விட்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவின் மீள்வருகையை ஒட்டுமொத்த எல்லாச் சமூகமும் ஏற்றுக் கொண்டதாகவோ எல்லா கட்சிகளும் வரவேற்பதாகவோ இல்லையென்பது உண்மை நிலையாக இருந்தாலும் “என்னையும் இந்த நாட்டையும் நேசிக்கும் மக்களின் அழைப்பை என்னால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தட்டிக்கழிக்க முடியாது. நிராகரிக்கும் மனநிலையும் எனக்கில்லை, ஆகவே இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கி போட்டியிடுவேன், வெற்றிவாகை சூடுவேன். ஆட்சி அமைப்பேன் என மஹிந்த சூளுரைத்தமையும், மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதன் மூலம் இந்த நாட்டுக்கு பெரும் பலம் உண்டாகுமென அவரின் ஆதரவாளர்கள் புகழாரம் சூடியிருப்பதும் அவருக்கிருக்கின்ற நம்பிக்கையையும் ஆதரவையும் எடுத்துக் காட்டுகிறது.
மஹிந்தவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதா, மீண்டும் அவரது கனவு நிறைவேறுமா என்ற சந்தேகங்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, இந்த நாட்டின் பராக்கிரமபாகு மன்னனாக, துட்டகைமுனுவாக, பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பான்மை மக்களால் போஷிக்கப்படுகிறவராக அவர் விளங்குகிறார் என்பது ஏதோ ஒருவகையில் உண்மை. இந்த உண்மையை புறம் தள்ளிப்பார்க்கவும் முடியாது. அதற்கு உதாரணந்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 47.58 வீத வாக்குக்கள் (5768090) அவருக்கு அளிக்கப்பட்டமை. சுமார் 10 மாவட்டங்களில் அவர் முன்னிலை வகித்தமை.
தெரிந்தோ தெரியாமலோ ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பை, அவருக்கு பெரும்பான்மை சமூகம் மீண்டும் கையளிக்குமாக இருந்தால் இலங்கை அரசியல் வரலாற்றில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் அளவிடப்பட முடியாததாகிவிடுமென, ஐ.தே.கட்சியினரும் மைத்திரி ஆதரவாளர்களும் சிறுபான்மை கட்சிகளும் கூவிக் கொண்டிருப்பதை கேட்கின்றோம்.
அதிலும் ஜே.வி.பி., ஹெலஉறுமய போன்ற கட்சிகள் இவ்விடயத்தில் நாகபாம்பைப் போல் படமெடுத்து ஆடிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக மக்கள் வழங்கிய ஆணையை எட்டி உதைத்து விட்டு, மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அவரது விசுவாசிகளுக்கும் வேட்புமனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தமையானது மிகப்பெரிய காட்டிக் கொடுப்பாகும் என்று ஜே.வி.பி சுட்டிக் காட்டியுள்ளது.
மஹிந்தவை தோல்வியடையச் செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சிக்கான பயணத்தை ஆரம்பித்து வைத்தோம். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.தே.கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளாலும் நாட்டின் கொள்கை ரீதியான ஒழுக்கமுள்ள நல்லாட்சியை கட்டியெழுப்ப முடியாது என்பது இன்று புரிகிறது எனக் குற்றஞ்சாட்டிக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முக்கிய பங்காளிக் கட்சியாக இருந்த ஜாதிக ஹெல உறுமய அக்கட்சியிலிருந்து (05.07.2015) வெளியேறியிருந்தது.
இக்கட்சிகளைப் போன்று ஐ.தே.கட்சியும் மஹிந்தவின் மீள் எழுச்சியை குழி தோண்டி புதைத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதே எமது ஒரே நோக்கமென ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விட்டிருக்கிறார்.
இவ்வாறெல்லாம் பார்க்கிறபோது, மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஏகோபித்த எதிர்ப்பு காணப்படுகிறது உண்மையென்ற போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக வெளிவந்த செய்தியானது சுதந்திர முன்னணி வட்டாரத்தை மாத்திரமல்ல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசியல் வட்டாரங்களில் பல்வேறு குழப்ப நிலைகளை உருவாக்கி விட்டிருக்கிறது.
குடும்ப ஆட்சிக்கு மீண்டும் இடமில்லை. குடும்ப ஆட்சி வருவதையோ ஜனவரி 8ஆம் திகதி இடம் பெற்ற மௌனப்புரட்சி தோல்வியடைவதையோ நான் அனுமதிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சூளுரைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி தொடர்ந்தும் மௌனம் சாதித்து வந்த அதேவேளை மேற்படி சூளுரையையும் செய்துள்ளார்.
இவ்வாறெல்லாம் இலங்கை அரசியல் குழப்பம் கண்டிருக்கும் நிலையில் மஹிந்தவின் மீள்வருகையோ அல்லது மீள் எழுச்சியோ, சிறுபான்மை சமூகத்துக்கும் நாட்டுக்கும் எத்தகைய மாற்று நிலையைக் கொண்டுவருமென சிறுபான்மை சமூகத்தவரும் நாட்டுமக்களும் பயம் கொண்டு காணப்படுகின்றார்கள் என்பதை கணித்துப்பார்க்க வேண்டும்.
ஜனவரி 8, ஆட்சி மாற்றத்தின் பிரதான பங்காளிகளாகக் காணப்படுகின்றவர்கள், பங்கு வகித்தவர்கள், முஸ்லிம் மக்களும் தமிழ்ச் சமூகமாகும். இதற்கு மாற்று கருத்தே இருக்கமுடியாது. தனது தோல்விக்கு முக்கிய சூத்திரதாரிகளாக இருந்தவர்கள் இவ்விரு சமூகமுமேயென்பதை முன்னாள் ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆத்திரத்துடன் சொல்லிக் காட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னைய எல்லாக்காலக் கட்டங்களிலும் இலங்கையரசுடன் உடன்பட்டு போனவர்களாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்களாகவும் முஸ்லிம் மக்கள் இருந்துள்ளனர்.
சுதந்திரத்துக்கு முன்னேயும் பின்னேயும் மூத்த தலைவர்களான ரீ.பி.ஜாயா, எச்.எஸ். இஸ்மாயில், எஸ்.காரியப்பர், ஏ.அஸீஸ், 1952 ஆம் ஆண்டுக்குப் பின் எம்.சி.எம்.கலீல், எம்.இ.எச். முகம்மது அலி, எம்.எம். இப்ராஹிம் சேர்.ராஸீக் பரீத், ஏ.எச். மாக்கன் மாக்கார், எம்.ஏ.பாக்கீர் மாக்கார், ஏ.எல்.அப்துல் மஜீத், பதியுதீன் மஹ்மூத், ஏ.எச்.எம்.பௌசி, ஏ.சி.எஸ். ஹமீத் என பல நூறு முஸ்லிம் அரசியல்வாதிகள் இலங்கை அரசியலின் ஏற்றத்துக்கும் சமூக மாற்றத்துக்கும் பொருளாதார விருத்திக்கும் அளப்பரிய தொண்டு செய்துள்ளனர். ஆளும் அரசாங்கங்களுடன் இணைந்தும் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைத்தும் தியாகித்த சமூகத்துக்கு 2010ஆம் ஆண்டின் பின் நடந்த கொடூரங்கள் அட்டூழியங்கள் சொல்ல முடியாதவையாகும்.
பள்ளிவாசல் எரிப்பு, ஹலால் மறுப்பு கிறீஸ் மனிதன், உணவு தடை, பர்தா விவகாரம் என்றெல்லாம் உண்டாக்கப்பட்ட கலாசார கொடுமைகள் அவர்களுக்கு பெரும்பாதிப்பையும் வெறுப்பையும் உண்டு பண்ணியதன் காரணமாகவே ஆட்சி மாற்றமொன்றை கொண்டுவர வேண்டும்மென்பதில் அம்மக்கள் தீவிரம் காட்டினார்கள். தான்தோன்றித்தனமாக பௌத்த மதவாத தர்பார், முஸ்லிம் மக்களுக்கு ஆட்சியின் மீது வெறுப்பையும் விரக்தியையும் உண்டு பண்ணியது. இவ்வகை பட்டறிவே ஆட்சி அதிகாரத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் கடுப்பு நிலையை உண்டாக்கியதன் கூட்டுவினைவே ஜனவரி 8 ஆம்
திகதியின் ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்தது.
இத்தகையதொரு கொடுங்கோல் ஆட்சி மீண்டும் வந்து விட்டால், இந்நாட்டில் குறிப்பாக, வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியேயும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டும், தனித்துவம் குலைந்து போய்விடும் கலாசாரம் புதைக்கப்பட்டு விடும், என்பதை நினைத்து பயம்கொள்வது இயற்கையே.
இதை மனதில் கொண்டே, மஹிந்தவின் அமைச்சரவையிலிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பின்வருமாறு கூறியிருந்தார்கள். ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் ஏற்படுத்திய அரசியல் புரட்சியை தலைகீழாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் சில தரப்பினரால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
நல்லாட்சியின் பாதையில் பயணிக்க வேண்டுமாக இருந்தால் ஆட்சி மாற்றத்துக்கு துணை நின்றவர்களுடன் தற்போதைய ஜனாதிபதி நிற்க வேண்டுமென, ரவூப் ஹக்கீமும், மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு எமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள், என அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கூறியிருப்பதை இங்கு மனம் கொள்ளப்பட வேண்டும்.
ஆட்சி மாற்றத்தின் இன்னொரு சூத்திரதாரிகளாக சொல்லப்படுகின்றவர்கள், வட கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள். இவர்கள் பார்வையில், முன்னாள் ஜனாதிபதியின் புதிய அரசியல் பிரவாகமானது, எவ்வளவு பின்னடைவைத் தரமுடியுமென்பதை மிக இலகுவாகவே கணக்கிட்டுப் பார்க்க முடியும்.
30 வருடகால ஆயுதப் போராட்டத்தை, ஈவிரக்கமின்றி முடிவுக்கு கொண்டு வரப்போவதாக கூறி முன்னாள் ஜனாதிபதி இழைத்த போர்க்குற்றம் மனித உரிமை மீறல் இன அழிப்பு இவற்றுக்குரிய நீதியையோ பரிகாரத்தையோ காண முடியாமல் போய்விடும்.
60 வருட காலமாக, அஹிம்சையென்றும் ஆயுதப்போர் என்றும் ராஜதந்திர நகர்வென்று மேற்கொண்டு வந்த எல்லா நகர்வுகளும் அர்த்தமற்றதாய், அரசியல் தீர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த பூர்வீகமான காணிகள், குடிமனைகள், அங்கிருக்கின்ற கோயில்கள், குளங்கள், மீண்டும் பார்க்க முடியாத அடையமுடியாதவைகள் ஆகிவிடும் என்ற பயப்பாடு தமிழ் மக்களுக்கு இன்னும் தான் இருந்து கொண்டிருக்கிறது.
இதுதவிர இராணுவ பிரசன்னம், சிங்களக் குடிப்பரம்பல், பௌத்த மத விஸ்தரிப்புக்கள் ஆகிய எல்லாமே தடுக்கமுடியாத விவகாரங்களாக மீண்டும் எல்லாவற்றுக்குமே உயிரூட்டம் கொடுக்கும் நிலையே உருவாகுமென, தமிழ் மக்களும் சாதாரண பிரஜைகளும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்க முடிகிறது. இவை உள்நாட்டில் அசாத்திய நிலையை உருவாக்கும் அதேவேளை மஹிந்தவின் மீள்வருகையானது சர்வதேச அளவிலும் கனதியான பாதிப்புக்களை உருவாக்கிவிடும் என்ற கடுமையான விமர்சனங்களே எழுந்த வண்ணம் இருக்கின்றன.
உதாரணமாக செப்டெம்பரில் வெளிவரவிருக்கும். ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் அறிக்கையானது, அர்த்தமற்ற, கனதியற்ற, காகிதங்களாக மாறுமொரு சூழ்நிலை உருவாகுமென்ற அச்சமும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இதுதவிர சர்வதேச அளவில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடனான உறவுகள் பலப்படுத்தப்பட்டு, ஜனநாயகம், சட்ட ஆட்சி போன்றவற்றுக்கு சாவுமணி அடிக்கும் இருண்ட சூழ்நிலையொன்று உருவாகுவதற்குரிய சாத்திய நிலைகளை மீண்டும் இலங்கையில் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டவர்களாக தமிழ்மக்கள் இருக்கின்றார்கள்.
பொதுவாகவே ஊழல்கள், மோசடிகள், பொது சொத்துக் கொள்ளையென்றவகையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கடந்த அரசாங்கத்தில் ஒன்றின் பின் ஒன்றாக கண்டுபிடிக்கப்பட்டு குற்றங்களாக சுமத்தப்பட்டு வருவதை கண்டு கொண்டிருக்கிறார்கள் மக்கள். மஹிந்தவின் மீதும் அவரின் குடும்பத்தவரின் மீதும் பகிரங்கமாகவே ஊழல்கள் மோசடிகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு உளவுப் பிரிவின் தகவலுக்கு அமைவாக வெளிநாடுகளில் ராஜபக் ஷ குடும்பத்தினரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் பெறுமதி 18 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இது இலங்கை நாணயப்படி 22 ட்ரில்லியன் ரூபாவாகுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேபோன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஜே.வி.பியினர் முறைப்பாடு தாக்கல் செய்தமை, திவிநெகும நிதி விடயம் சார்பில் பஷில் ராஜபக் ஷ கைது செய்யப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுக்களும், மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்தவர்கள் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவை வேட்பாளராகவோ, பிரதமர் வேட்பாளராகவோ நியமிக்க எடுக்கும் முயற்சிகளுக்கு உருவாகியிருந்த எதிர்ப்பலைகள் மத்தியில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பட்டியலின் இடம் என்ற செய்தி எல்லா தரப்பினர் மத்தியிலும் பேரதிர்ச்சியை உண்டாகியிருப்பது இயல்பே! அதிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இச்செய்தி பாரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியிருக்கின்றது.
இதே வேளை இச்செய்தியானது மஹிந்தவின் ஆதரவாளர்களான விமல் வீரவன்ச , வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இனிப்புச் செய்தியாக மாறியிருந்தாலும் சிறுபான்மை சமூகங்களை பயம் கொள்ள வைத்துள்ளது என்பது உண்மையே. இதுப் பற்றி ஜே.வி.பியினர் தமது விசனத்தை இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
ஆட்சியை கவிழ்த்து மீண்டும் சர்வாதிகார ஆட்சியை தக்கவைக்க வேண்டுமென்ற கனவில் மஹிந்த வரவிரும்புகின்றார். முழுமையாக பழிவாங்கும் அரசியல் பிரசாரத்தையே மஹிந்த கூட்டணி மேற்கொண்டுவருகிறது. மீண்டும் மஹிந்தவின் ஆட்சி அமைக்கப்படுமானால் நாட்டில் பழிவாங்கும் செயற்பாடுகள் தலைத்தூக்குமென ஜே.வி.பியினர் தமது கடுமையான விமர்சனங்களை அண்மையில் வெளியிட்டிருந்தனர்.
மஹிந்தவின் நியமன பட்டியல் விவகாரம் ஊர்ஜிதப்படுத்தப்படுமா இல்லையா என்ற சந்தேகங்களுக்கு எப்படியோ நாளை மறுநாள் (13.07.2015 ) திங்கட்கிழமைக்கு முன் முடிவு தெரிந்துவிடும். இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கு என்ன? இவர் இன்று சூழ்நிலைக் கைதியாக மாறியுள்ளார் என பலரும் விமர்சிக்கப்படும் அளவுக்கு மாத்திரம் அல்ல. மைத்திரியை ஜனாதிபதி கதிரையில் அமர்த்துவதற்கு உள்ளும் புறுமும் பாடுபட்டவர்கள் அதிருப்தி அடையும் நிலைக்கு சூழ்நிலைகள் மாறிக் கொண்டிருக்கிறது.
ஆட்சி மாற்றத்திற்காக உழைக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா , சோபித தேரர், ரணில் விக்ரமசிங்க , இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் போன்றவர்களே இன்று ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். மார்ச் 12, பிரகடனத்தைப் போல் ஊழல் மோசடியாளர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையோர் உட்பட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் கட்சி வேட்பு மனு வழங்கக் கூடாது என சோபித தேரர் எச்சரித்திருப்பதையும் காணமுடிகிறது. இந் நிலைமையை ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையிலேயே, சுதந்திர கட்சியிலிருந்து அமைச்சர் எஸ்.பி.நாவின்ன விலகியதும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விலக ஆலோசித்து வருவதும் பனிப்போர் நெருக்கடியை சுதந்திர கட்சிக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது.
இதற்கிடையில் பிந்திய செய்திகளின் படி சில நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை தவிர்ந்த வேறு எந்த மாவட்டத்திலும் போட்டியிட அனுமதிப்பதில்லை என்ற நிபந்தனையொன்று மைத்திரிபால சிறிசேனவுடன் சுதந்திர கட்சியின் வேட்பு மனு சபை உறுப்பினர்கள் நடத்திய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இதேவேளை மஹிந்த போட்டியிடுவது கடைசி நிமிடத்தில் பல்வேறு உபாயங்களின் அடிப்படையில் மறுக்கப்படலாம் என்ற ஆருடங்கள் கூறப்படுகிறன. சில அரசியல் விமர்சகர்களின் அபிப்பிராயப்படி என்ன தான் நிபந்தனையின் அடிப்படையில் மஹிந்த போட்டியிட மைத்திரி அனுமதி வழங்க ஒத்துக் கொண்டிருந்தாலும் பல்வேறு நிபந்தனைகளையும் குற்றச்சாட்டுக்களையும் அடிப்படையாகக் கொண்டு மறுக்கும் யுக்தியை கையாளலாமென்ற கருத்துக்களும் கூறப்பட்டு வருகின்றன.
அவ்வாறு கடைசி நேரத்தில் சுதந்திரக்கட்சியில் போட்டியிட மஹிந்தவுக்கு தடைவிதிக்கப்படுமானால் நமது இலங்கை சுதந்திர முன்னணியென்ற காட்சியின் பூ மொட்டு சின்னத்தில் போட்டியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உத்தியோகபூர்வமற்ற செய்தி கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை மஹிந்த களமிறக்கப் படுவாரானால் தானும் போட்டியிட நேரி
டும் என்ற வாதத்தை முன்வைத்து கொண்டி
ருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டார நாயக்க. இவ்வாறு எல்லா திசைகளிலும் குழம்பிப்போன ஒரு தேர்தலாகவே நடைபெறவுள்ள தேர்தல் ஆகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சொல்லப் போனால் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை நோக்கி நாடு நகர முடியாத இறுக்கமான சூழ்நிலையொன்று உருவாகிவருகிறது என்பது எல்லோருடைய கணிப்பாகும்.
அதிலும் சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பொருத்தவரை மஹிந்தவின் மீள்வருகையை தடுக்கும் சக்தி கொண்டவர்களாகவோ அல்லது தாம் விரும்பும் நல்லாட்சிக்கான அத்திவாரத்தை இடுபவர்களாக இருப்பார்களா என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
விரும்பியோ விரும்பாமலோ ஆளும் தரப்பாகவோ அல்லது எதிரணியாகவோ ஒரு சக்தி இந்தேர்தலில் உருவாக்கப்படுமாக இருந்தால் இந்த நாடு மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகவே மாறிவிடும்.
(திருமலை நவம் )