5 மாத கைக் குழந்தையோடு 17 வயதுப் பெண்ணின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

(ஹுஸைன்)
ஐந்து மாத கைக்குழந்தை அருகிலிருக்க 17 வயதான அக்குழந்தையின் தாயினது சடலமொன்று விட்டிலிருந்து புதன்கிழமை மாலை மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டைக் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திகிலிவெட்டைக் கிராமம் விஷ்ணுகோயில் வீதியைச் சேர்ந்த கந்தையா பவித்திரா (வயது 17) என்ற ஒரு குழந்தைக்குத் தாயான குடும்பப் பெண்ணின் சடலமே வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோயில் திருவிழாவை முன்னிட்டு எற்பாடு செய்யப்பட்ட சிரமதானமொன்றுக்கு காலையில்  சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி வந்து பார்க்கும்போது மனைவி சடலமாகக் கிடந்ததாகவும் ஐந்து மாதக் கைக்குழந்தை அருகே இருந்ததாகவும் பெண்ணின் கணவர் மரண விசாரணையின் போது சாட்சியமளித்தார்.


பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மற்றும் ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் சார்ஜன்ற் ஏ.இஷற். ஹஸன் ஆகியோர் திகிலிவெட்டைக் கிராமத்திற்கு படகுமூலம் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.