மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் வெள்ளவத்தை புகையிரத விபத்தில் பலி

(ஹுஸைன்)

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் சடலம் மீட்கப்பட்டு நேற்று சனிக்கிழமை வெள்ளவத்தை மாநகர வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 வெள்ளவத்தையில் நேற்று  வெள்ளிக்கிழமை மாலை வேளையில்  தொலைபேசியில் உரையாடிக்கொண்டு புகையிரத தண்டவாளத்தின் அருகே நடந்து சென்றுள்ளார்.

இவ்வேளையில் புகையிரதம் இவரை மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட இவர் பாரதூரமான உட்காயங்களுக்குள்ளாகி அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த இவர் ஒரு குறுந்திரைப்படக் கலைஞர் என்றும் ஏற்கெனவே சில குறுந்திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.