இலங்கையின் கலாசார, மத பாராம்பரியங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் 42 மில்லியன் அமெரிக்க உதவி



(ஹுஸைன்)

இலங்கையின் கலாசார மற்றும் மத பாரம்பரியங்களை  பாதுகாக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு  அங்கமாக, புராதன பௌத்த ரஜகல மடாலயத்தை  மீளமைத்தல் மற்றும் அனுராதபுர தொல்பொருள் அருங்காட்சியகத்தின் புராதன  தொல்பொருட்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவும் முகமாக, மொத்தமாக 300,000 அமெரிக்க  டொலர்கள் (இலங்கை ரூபாயில் 42.1 மில்லியனுக்கும் அதிகம்)  பெறுமதியான நன்கொடை வழங்குவதனை அமெரிக்கத் தூதரகம் மகிழ்வுடன்  அறிவிப்பதாக அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் மத மற்றும் கலாசார பாரம்பரிய பகுதிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளது. 

2005 ஆம் ஆண்டு முதல் இதற்காக 100 மில்லியன் இலங்கை ரூபாய்களை வழங்கியுள்ளது.  என அமெரிக்கத் தூதுவர் அதுல் கைசப்  தெரிவித்தார்.

'இலங்கையின் கலாசார பராம்பரிய தலங்களை  பாதுகாப்பதற்கான எமது ஒத்துழைப்பானது, சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுலாத்துறைக்கான ஊக்கத்தை வழங்கவும், மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை  உருவாக்கவும் உதவும் என நம்புகின்றோம்' என அவர் மேலும் கூறினார்.

ரஜகல மடாலயத்தின் மீளமைத்தல் பணிகளுக்காக கலாசார பாதுகாத்தலுக்கான தூதுவரின் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக அமெரிக்கத் தூதரகத்திடம்  இருந்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 150,000 அமெரிக்க டொலர்களைப் பெறும்.

மடாலயத்தின் முழுமையான நில ஆய்வு மற்றும் பழங்கால பௌத்த துறவிகளால் பயன்படுத்தப்பட்ட மிகவும் முக்கியமான நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல் என்பவற்றிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 100,000 நன்கொடையைத் தவிர, இந்த செயற்றிட்டத்திற்காக அமெரிக்காவால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட நிதியாக இது உள்ளது.

'இலங்கையின்  பௌத்த துறவிகளின் வாழ்க்கை முறை குறித்து மேலும் கற்றுக் கொள்வதற்கு  அமெரிக்காவுடனான எமது பங்காளித்துவம் மிகவும் முக்கியமானது' என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், வரலாற்று மற்றும் தொல்பொருளியல்  பிரிவின் தலைவர், பேராசிரியர் பி.பீ. மன்டாவல தெரிவித்தார்.

இந்த புதிய நன்கொடையின் கீழ், இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு வழங்கப்படும் 150,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான  நன்கொடையானது, அனுராதபுரம் தொல்பொருளியல் அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை சிறப்பாக களஞ்சியப்படுத்தவும், பாதுகாப்பதற்கும் உதவும்.



உள்ளுரில் உள்ளவர்களாலும், வெளிநாட்டவர்களாலும் அதிகம் விஜயம் செய்யப்படும் இலங்கையின் முன்னணி அருங்காட்சியகத்திற்கு 2009 மற்றும் 2012ஆம்  ஆண்டுகளில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட முந்தைய நன்கொடைக்கு மேலதிக பெறுமதி சேர்ப்பதாக  இந்த நன்கொடை அமைந்துள்ளது.

'முறையான நிதியின்மை, மோசமான களஞ்சியப்படுத்தல் நிலைமைகளினால்  எமது விலைமதிப்பற்ற வரலாற்றின் ஒரு அங்கம் அழிக்கப்படும் அச்சுறுத்தல் இருந்தது.' என அனுராதபுரத்திற்கான செயற்றிட்டத்தில் பணியாற்றி வரும் தொல்பொருளியல் பாதுகாப்பாளர் அனுஷா கஸ்தூரி தெரிவித்தார். 'ஆனால், தற்போது எதிர்காலத் தலைமுறையினருக்காக அதனை பாதுகாக்கலாம்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.


2005 ஆம்  ஆண்டு முதல், கலாசார பாதுகாப்புக்கான தூதுவரின் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக இலங்கையில்  இதுவரை மொத்தமாக 730,000 டொலர்கள், (இலங்கை ரூபாயில் 100  மில்லியனுக்கும் மேல்) பெறுமதியான 11 செயற்றிட்டங்களுக்கு அமெரிக்கத் தூதரகம் நன்கொடை வழங்கியுள்ளது.