வெல்லாவெளி வக்கியல்ல தபால் நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வக்கியல்ல உப தபால் நிலையத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 30 பவுண் தங்க நகைககள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.கே.எல்.நிமால் தெரிவித்தார்.


இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணிக்கும் 5.00 மணிக்குமிடையில் இடம்பெற்றிருப்பதாக உபதபால் அதிபர் மாணிக்கப்போடி சித்ரவேல் தெரிவித்தார். 

வெல்லாவெளி கண்ணகை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான தங்க நகைகள் பாதுகாப்புக்காக குறித்த உபதபால் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று மாலை உபதபால் அதிபர் தபாலகத்தை திறந்து வைத்து விட்டு வெளியில் சென்றதை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் தபாலகத்தினுளிருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் ஸ்தலத்துக்கு சென்றுள்ள தடவியல் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.