திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான கும்ப விழா ஒரு பண்பாட்டியல் பார்வை

(பாலசிங்கம் சுகுமார் )
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குவது கும்ப விழாவாகும். நாம் இங்கு கும்பவிழா என அழைத்தாலும், ‘கும்பம்’ என்பதே இங்கு பொதுப்படையான வழக்கு.
திருகோனமலை மாவட்டத்தில் திருகோனமலை நகரத்திலும் நகரை அண்டிய பகுதிகளிலும் தம்பலகாமத்திலும் மூதூர் கிழக்கிலும் நிலாவெளியிலும் சாம்பல் தீவிலும் கும்ப விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூதூர் கிழக்கில் வரலாற்று பழமை மிக்கதும் தொன்ம மரபு சார்ந்தத கிராமங்களான சேனையூர் கட்டைபறிச்சான் மருத நகர் கல்லம்பார் அம்மன் நகர் கடற்கரைச் சேனை சாலையூர் சந்தோச புரம் ஆகிய கிராமங்களில் கும்ப விழா மிகச் சிறப்பாக பரம்பரை பரம்பரையாக கொண்ட்டாடப் பட்டு வருகிறது.
தம்பல்;காமம் நீண்ட வரலாறு கொண்ட பண்டைத் தமிழ் கிராமம் கடல் நடுவே காணும் தீவுக் கூட்டங்கள் போல வயல்களின் நடுவே திட்டுத்திட்டாய் தெரியும் குடியிருப்புக்கள் கோயில் குடியிருப்பு புதுக் குடியிருப்பு பட்டி மேடு கூட்டாம் புளி கள்ளிமேடு முன்மாரித்திடல் சிப்பித் திடல் வர்ண மேடு நாயன்மார் திடல் குஞ்சடப்பன் திஅல் கரச்சிதிடல் நடுப்பிரப்பன் திடல் என தம்பலகாமத்தில் கும்ப விழா அதன் தனித்துவத்தை பறை சாற்றி நிற்கிறது.
திருகோணமலை கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்து வரலாற்றுப் பழமையும் நவீனத்துவத்தின் வாசல்களையும் ஒருங்கே கொண்ட அழகிய தமிழர் தலை நகர்.இங்கு கும்ப விழா ஒரு பெரும் பண்பாட்டின் அடையாளமாக கொண்ட்டாடப் பட்டு வருகிறது கும்பத்து மாலில் தொடங்கிய இம் மரபு இன்று பெரும் சமஸ்கிருத மயப்பட்ட ஆலயங்களுக்குள்ளும் தன் செல்வாக்கை வீச்சை வெளிப்படுத்தி நிற்கிறது.நகரை அண்டிய பகுதிகளான சல்லி புளியங்குளம் சல்லி லிங்க நகர் நிலாவெளி ஆகிய இடங்களிலும் நகரத்தில் கும்பத்து மால் திருக்கடலூர் பேச்சியம்மன் கோயில் காளி கோயில் பத்தாம் நம்பர் கண்ணகியம்மன் வட பத்திர காளி கோயில் வராகி கோயில் மடத்தடி மாரியம்மன் மனையாவெளி மாரியம்மன் கந்தசாமி கோயிலடி உவர்மலை காளி கோயில் என நீட்சி கண்டுள்ளது.

கும்பம், கும்பத்துமால், சாமியாட்டம், சாட்டையடி, மறிப்புக்கட்டு தீத்தச்சட்டி, மறிப்பை முறித்தல், கட்டை வெட்டுதல், உருவேற்றுதல், மந்திரம், மந்திர உச்சாடனம் மடை, சிலம்பு, பறை உடுக்கு, பூசாரி, இணைப்பூசாரி என இதனோடு இணைந்து வருகின்ற கலைச்சொற்களின் பட்டியல் நீளும்.
கும்பம் என்பதற்கு நேரடியான தமிழ் சொல் குடம் என்பதாகும். இதனால் தான் கும்பாபிசேகம் என்ற சமஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக குடமுழுக்கு என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் கும்பம் ஒரு தமிழ் சொல்லாகவே இங்கு மாறி ஒரு பண்பாட்டின் அடையாளமாக வெளிப்பட்டு நிற்கிறது.
கும்பம் பற்றி பண்டிதர் வடிவேல் அவர்கள் சீக்கியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளதாக பல குறிப்புக்களில் எழுதியுள்ளனர். ஆனால் சீக்கியரது மத அனுஸ்டானங்களிலோ அவர்களது கலை நிகழ்வுகளிலோ இத்தகைய கலாசார அடையாளங்களை காணமுடியவில்லை. அவரக்ளது நடனமாக பங்காரா நடனமும் அதனோடு இணைந்து துள்ளல் இசையும் அமைந்திருக்கிறது. அத்துடன் அவரகளது சடங்கு முறைகளில் கும்பம் போன்ற எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை.
இலங்கையில் வேறு எங்கும் கும்ப விழா நடைமுறையில் இல்லையென்றே சொல்லலாம். மடடக்களப்பில் கும்பம் சொரிதல் நடைமுறையுள்ளது. மாரியம்மன் பேச்சியம்மன் சடங்குகள் முடிவடைய கடைசி நாளில் கடலில் அல்லது ஆற்றில் தகும்பம் சொரிதல் சடங்கு நடைபெறும், அதற்கும் திருகோணமலையில் நடக்கும் முறைமைகளுக்கும் நிறையவே வேறுபாடு காணப்படுகிறது.
திருகோணமலையில் நடைபெறும் கும்பவிழா நவராத்;திரியோடு தொடர்புபட மட்டக்களப்பு குமபம் சொரிதல் வைகாசி ஆனி மாதங்களில் நடைபெறும். மாரியம்மன் சடங்குகளோடு தொடர்புபட்டு நிற்கிறது.
கும்ப விழா எப்போது தொடங்கியது என்ற கேள்வி பலர் மனதிலும் எழுவது இயற்கையே. என்னிடமே பலர் கேட்கிருக்கிறார்கள். சடங்குகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தொடக்கமென்ன? முடிவென்ன? என அடிமுடி தேடமுடியாது. சடங்குகளும் நம்பிக்கைகளும் மனித நாகரிகத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளே. அவை காலங்காலமாக பல தலைமுறைகள் தாண்டி நீண்டு செல்லும் மரபுகள் திருகோணமலை கும்ப விழாவும் அத்தகயதே.
இத்தகைய கேள்விகளும் விடைகளும் இருந்தாலும் மூலத்தைத் தேடுதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
கேரளாவில் நடைமுறையில் உள்ள சடங்குகளில் நாம் இந்த முறையிலான அமைப்பைக் காணலாம். தேயாட்டம் ஒட்டம் துள்ளல் பகவதி அம்மனுக்கு நடக்கும் சடங்குகள் நம் கும்ப சாயலைக் கொண்டுள்ளன.
ஒவ்வொரு பிரதேசமும் தமக்கான பண்பாட்டு மரபுகளை தமக்குள்ளாகவே உருவாக்குகின்றபோது வேறொரு பண்பாட்டிலிருந்து வருகின்றவைகளையும் உள்வாங்கிக்கொண்டு புதிய வடிவமாய் பரிணமிக்கின்றமையையும் உலக பண்பாட்டு வரலாறு உணர்த்தி நிற்கின்றது.
பொதுவாக, தென்னாசிய மரபுக் கலைகள் சடங்குகளின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. கும்ப விழாவும், ஒரு சடங்காகவும் கலையாகவும் வெளிப்படுவதை நாம் காணலாம்.
தென்னாசிய மரபில் சடங்குகள் கலையோடு இணைந்தே பயில் நிலையில் உள்ளன. கும்பவிழா ஒன்பதுநாள் சடங்கும் அதனோடிணைந்து வருகின்ற பூசைகளும் சாமியாட்டமும் மனிதனின் நம்பிக்கையின் வழிவந்த கலையின் சங்கமிப்பே.
சடங்குகளினடிப்படையிலேயே கலைகளின் உருவாக்கம் என்பது உலக வரலாற்றில் நாம் கிரேக்கத்தில் டயோனிசஸ் தெய்வத்துக்குச் செய்கிற சடங்குகளே நாடகமாக உருமாறுவதையும் ரோமா மரபில் வீனஸ் தெய்வத்துக்குரிய சடங்குகளும் எகிப்தின் பழைமிகு நாடக உருவாக்கமும் கலைகளின் உருவாக்கத்தால் சடங்குகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. இங்கு கும்பமும் இன்றுவரை சடங்காகவும் கலையாகவும் தொடரும். இரு பண்பாட்டு கையளிப்பாக அமைந்துள்ளது.
ஆசிய மரபில் சீன நடனங்கள் யப்பானிய மரபில் நோ கபுகி, நடன நாடக முறைமைகள் இதற்குரிய பாலித்தீவு நடனங்கள் தாய்லாந்தின் நடன முறைமைகள் சடங்காக உருவாகி கலையாக மாறியவையே. இன்றும் அவற்றுள் சில சுவையாகவும் சடங்காகவும் தொடர்வதை நாம் காணலாம். ஏன் சிங்கள மரபில் பல்வேறு கலைகளையும் பயின்று அதன் வெளிப்பாடாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கும்ப விழாவில் வருகின்ற கும்ப ஆட்டம் ஒவ்வொருவருக்குள்ளிருக்கும் அல்லது புதைந்து கிடக்கும் கலைதிறனின் வெளிப்பாடாகவே நாம் காணமுடியும்.
கும்பம் எடுத்தல், கும்பம் தூக்குதல் என்ற நிகழ்வில் பூசாரியார் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வத்தை உருவகப்படுத்தி அவர்கள் மீது மந்திரங்களை ஏற்றுகிறார்களோ அதன்மூலமாக அந்தத் தெய்வங்கள் பற்றிய ஐதீகங்களையும், புராணங்கள் கதைகள் கூறுகின்ற குணாம்சங்களையும் உள்வாங்குகிறார்கள். பின்னர் ஆடுகிறபொழுது அந்த தெய்வமாகவே தங்களை உருவகித்துக் கொண்டு ஆடுகிறார்கள். பரம்பரையாக தங்கள் குலமரவு தெய்வங்களையும் வெளிப்படுத்துவர். உதாரணமாக மாரியம்மன் என்றால் மிகவும் நளினமான ஆட்டம் வெளிப்படும். காளியென்றால் மிகவும் ஆக்ரோசமான ஆட்டத்தைக் காணலாம். அந்ததந்த கடவுளர்களை உருவகித்துக் கொள்ளல் இங்கு முக்கியப்படுகிறது. ஒரு நாடக நெறியாளன் எப்படி ஒரு பாத்திரத்துக்கான குணாம்சங்களை நடிகர்களுக்குச் சொல்லிக் கொடுப்பானோ அதேபோலவே மந்திரம் மூலம் ஒரு பூசாரி அந்த தெய்வத்துக்குரிய மந்திரங்களை உச்சத்துல் அழைக்கிறபொழுது அந்த தெய்வமே எழுந்து வருகிறது போல அமையும் அந்தக்காட்சி, வீரபத்திரன் என்றால் தக்க யாகத்தை அழிக்க அகோர வீரபத்திரன் புறப்பட்ட காட்சியை மந்திரம் மூலம் வெளிப்படுத்த வீரபத்திரனாக தன்னை உருவகித்து கொண்ட ஆட்டம் வெளிப்படும். இங்கு பங்குகொள்கிற ஒவ்வொருவரும் தாங்கள் ஒரு கலை வெளிப்பாடடைச் செய்கிறோம் என்று அறியாமலேயே கலைஞர்களாக பரிணமிக்கின்றனர்.
இந்திய நாட்டிய சாஸ்திரத்தில் பரத முனிவர் முதல் நாடகமாக பாற்கடல் கடைந்த கதை என்பது ஒரு சடங்குத் தன்மையுடன்தான் நடைபெறுகிறது. நாட்டிய சாஸ்திரத்தின் தொடக்கமே சடங்குதான். அந்த சடங்கிலிருந்துதான் நடனமுறைமைகளை பின்னாளில் வேறுபடுத்தி அதற்கான இலக்கணங்களை உருவாக்கினார்.
நாட்டிய சாஸ்திர ஆசிரியர் சொல்கிற ரசானுபவம் நமக்கு கும்ப சடங்கில் கிடைக்கிறது. ஒன்பது வகையான ரசங்களும் அதற்கு மேலதிகமாக ஊற்றுப்பெறும் ராசானுபவங்களும் கும்ப ஆட்டத்தில் காணலாம். இங்கு போலச் செய்தலின் மிக உச்சமான வெளிப்பாட்டுத் திறன் ஸ்ரனிஸ்லாஸ்கி சொல்வாரே பாத்திரங்களை வெளிப்படுத்தல் என்பது இங்கு கும்பவிழாவில் ஒரு ரசவாதமாக மாறி நம்மை பிரமிக்க வைக்கிறது. எத்தனை முகங்கள், எத்தனை பாவங்கள் மாறிமாறி வருகின்ற உணர்ச்சிப் பிரவாகம் எல்லாம் இங்கு கொட்டித் தீர்க்கப்படுகின்றன.
குரொடடவஸ்கியின் குரூர அரங்கிற்கான மூலத்தையும், மேயர்கோல்டின் உடற்பொறிமுறை அரங்கிற்கான ஆதாரங்களும், பெரக்டின் அன்னியமாதல் கோட்பாட்டையும், ஸ்ரனிஸ்லாஸ்கியின் பாத்திரமாதல் மரபையும், றிச்சட் செக்கனாரின் அனைத்தும் உட்கொண்ட அரங்கின் கூறுகளையும் நாம் இந்த கும்பவிழாவில் ஆடப்படும் ஆடடத்தில்; அவதானிக்க முடியும.
அரங்கியல் வரலாற்றில் உருவான கோட்பாடுகள் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டே உருவாகின்றன. இரண்டு பிரதானமான விவாதங்கள் உள்ளன.
(1) சடங்கிலிருந்து நாடகங்கள் உருவானது
2) சடங்கே நாடகம்.
இந்த் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றையொன்று இணைத்த முறைமைதான் இங்கு சடங்கே நடனமாக மாறுவதை நாம் காணலாம். ஒரு பரதநாடடிய அரங்கேற்றத்தில் நீங்கள் எத்தனை விதமான பாவங்களையும் ரசானுபவத்தையும் பெறுவீர்களோ அதற்கு அதிகமாகவே நீங்கள் கும்ப ஆட்டத்தில் காணமுடியும். சில இடங்களில் நரசிங்களைக் ஆடுபவர்கள் நாக்கை நீட்டிக்கொண்டு கோர முகத்தை வெளிப்படுத்துகிறபோது எந்தவொரு நடிகனாலும் அத்தகைய பாவத்தைக் கொண்டுவர முடியாத அளவுக்கு கும்ப ஆட்ட முறைமை அமைந்திருக்கும்.
கும்ப விழாவை என் சிறுவயது தொடக்கம் பக்கத்திலிருந்து பார்த்து ரசித்தவன் என்ற வகையிலும் பின்னாட்களில் இவற்றை அறிவியல் ரீதியாக எப்படிப் பார்க்கலாம் என்ற வகையிலும் எனக்கு மேலைத்தேய, கீழைத்தேய கலை மரபு கோட்பாடுகள் துணை நிற்கின்றன. ஒன்றை நாம் எப்படிப் பார்க்கின்றோம்
என்ற வகையில்தான் அதன் தன்மை நமக்குள் வெளிப்படும். அதன் உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு சடங்காக பக்தி அனுபவமாக இருக்க வெளியிலிருந்து ரசிப்பவர்களுக்கு அது ஒரு கலையாக உணரப்படுகிறது.
கும்பவிழா ஒரு தெரப்பியாகவும் தொழிற்படுகிறது. வருசம் முழுவதும் தங்களுக்குள் அடக்கி வைத்திருக்கும் கோபம், சந்தோசம், துக்கம், வெப்பிசாரம் என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு களமாகவும் இவை அமைகிறது. இங்கு ஆடுபவர்கள் அந்த நிலையை பெறுகிற போது பார்ப்பவர்களுக்கு அதனுள் சென்று அந்த அனுபவத்தைச் சுவைக்கிறார்கள். மன அழுத்தங்களுக்கு மருந்தாக இவை மாறுவதை நாம் இங்கு அவதானிக்க முடியும்.
திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாக நாம் இங்கு கும்ப விழாவைப் பார்க்க முடியும். ஒரு நடன ஆசிரியர் திருகோணமலையில் இந்த கும்ப நடனத்தை மேடையில் தன் பிள்ளைகளைக் கொண்டு நிகழ்த்தியிருந்தார். அவர் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. ஆனாலும் அவை ஒரு முக்கியமான மடைமாற்றம் தனியே ஒரு சடங்கு முறைக்குள் அடங்கிப் போகாமல், இதனை நாம் ஒரு கலையாகவும் அடையாளப்படுத்த வேண்டும்