சட்ட விரோதமாக 62 மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர் கைது

( அஹமட் ஸம்றி )
அக்கரைப்பற்று  சாகாமம் வீதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக 62 மதுபான போத்தல்களை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபரை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்தனர்.

அக்கரைப்பற்று பொலிசார் நேற்றிரவு ; வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சந்தேகத்திற்கிடமாக சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனை செய்த போது முச்சக்கரவண்டிக்குள் இருந்து மதுபான போத்தல்களை கைப்பற்றியதுடன் முச்சக்கர வண்டி சாரதியையும் கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றினர்.

அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் உள்ள மதுபானசாலையில் ; இருந்து பனங்காடு பிரதேசம் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போதே இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் போயா தினத்தில் கூடிய விலைக்கு மதுபானத்தை விற்கும் நோக்கிலேயே சந்தேக நபர் மதுபான போத்தல்களை கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 50 உம்,  750 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 12 உம் கைப்பற்றப்பட்டதாகும் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை விசாரணையின் பின் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.