15 வயதுச் சிறுவன் கடலில் மூழ்கி மரணம்.

(சுபஜன், ஹுஸைன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடிக் கடலில் கடல் குளிப்பிற்காகச் சென்ற 15 வயதுச்  சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஏறாவூர் ஆலையடி வீதியைச் சேர்ந்த ஜலால்தீன் முஹம்மத் அம்ஜத் எனும் இந்த சிறுவன் தனது நண்பர்கள் சகிதம் சவுக்கடிக் கடலில் கடல் குளிப்பிற்காகச் சென்றுள்ளான்.

நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது பாரிய அலையில் சிக்கி மூழ்கியுள்ளார்.
கடற்கரையிலிருந்தோரும் நண்பர்களுமாகச் சேர்ந்து நீரில் மூழ்கிய சிறுவனைக் கரைசேர்த்து அவரை உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்
எனினும் வரும் வழியிலேயே சிறுவனின் உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.