மட்டுநகரில் மீண்டும் தொடரப்படும் மாநகர சவால் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டிகள்

மட்டக்களப்பு மாநகர சபையும், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கமும் இணைந்து இணைக்கும் இதயங்கள் எனும் அறக்கட்டளையின் அனுசரணையில் கடந்த மே மாதத்தில் ஆரம்பித்த மாநகர சவால் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டிகள் சில துரதிஸ்டவசமான சம்பவங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மட்டுநகரில் தொடரப்படுகின்றன. 

இன்று (25.11.2015) பிற்பகல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் கூளாவடி டிஸ்கோ கழகத்திற்கும் சீலாமுனை யங்ஸ்டார் கழகத்திற்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. 

இதில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு பேறினைப் பெற்ற நிலையில் போட்டி நிறைவடைவதற்கு சுமார் பத்து நிமிடங்கள் இருந்த வேளையில் போதிய வெளிச்சமின்மையால் போட்டி,  நடுவரால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வரும் நாட்களில் குறித்த இந்துக் கல்லூரி மைதானத்தில் மாநகர சவால் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின்  சுற்றுப் போட்டிக் குழுத் தலைவர்  இ.செல்வக்குமார் Batti News.Com இற்குத் தெரிவித்தார்.