கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை

யாழ்ப்பாணம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் முன்னே பாய்ந்து உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் வியாழக்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

 சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இந்த மாணவன் ரயிலின் முன் பாய்ந்துள்ளார்.

 கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தனக்கும் புரிந்துள்ள போதும், இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு புரியவில்லையென மாணவன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு சென்ற ரயிலின் முன்னேயே மாணவன் பாய்ந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.