ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

திவிநெகும திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்குக் கோழிக்குஞ்சுகளை வாழ்வாதார உதவியாக வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (12) காலை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு தெற்கு வலயத்துக்கான வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் பயனாளிக் குழுக்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட, கோழி வளர்ப்பைத் தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 116 பேருக்குத் தலா 12 வீதம் 1392 கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பகிர்ந்தளிக்கப்பட்ட குறித்த கோழிக்குஞ்சுகள் திருகோணமலை கால்நடைகள் சுகாதாரத் திணைக்களத்திலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன், ஆலையடிவேம்பு தெற்கு வலயத்துக்கான வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் ஆகியோர் குறித்த பயனாளிகளுக்குக் கோழிக்குஞ்சுகளை வழங்கிவைத்தனர்.