தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தமிழர்கள் 20வருடங்களுக்கு பிந்திய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

(படுவான் பாலகன்) தமிழ் சமூதாயம் தகவல்தொழிநுட்பங்களை பயன்படுத்துவதிலும், கையாள்வதிலும் அதற்கான பொருட்களை திருத்துவதிலும் ஏனைய சமூகங்களை விட பின்தங்கிய நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றனர். என கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும், மாகாணசபை உறுப்பினருமாகிய பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அறிவுமைய அபிவிருத்தியை உறுதிசெய்து கொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூடம்; திறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(28) இடம்பெற்றவேளை அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

காலத்திற்கு ஏற்றால்போல் தொழிநுட்பங்களும், அவற்றினை கையாளும் திறன்களும்  வளர்ச்சியடைந்து சென்றாலும் தமிழர்கள் அவற்றை கையாள்வதும் திருத்துவதும் குறைவாகவே இருந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கணினி ஒன்று பழுதடைந்துவிட்டால் அவற்றை திருத்துவதற்கு கூட ஏனைய சமூகங்களையே நாடவேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனர். இச்செயற்பாடுகள் தமிழர்கள் 20வருடங்களுக்கு பிந்திய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை வெளிக்காட்டுகின்றது.

இளம் தலைமுறையினராகிய மாணவர்கள் எல்லாத்துறைகளையும் கற்க வேண்டும். அவ்வாறு கற்பதன் மூலமாகத்தான் தற்கால சூழலுக்கு முகம்கொடுக்ககூடியவர்களாகவும், தொழில்வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடியவர்களாவும் இருக்க முடியும். அதைவிடுத்து நாம் பழைய நிலையிலே இருந்து கொண்டிருந்தால் இன்னும் இன்னும் பின்னுக்கே தள்ளப்படுபவர்களாகவே இருக்க நேரிடும் என மேலும் தெரிவித்தார்.