சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் கைது

(எப்.முபாரக்)

திருகோணமலை- வெல்கம விகாரை பகுதியில் சட்ட விரோதமான முறையில் இரண்டு துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு  முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெல்கம் விகாரை-விகாரை வீதியைச்சேர்ந்த கொடித்துவக்கு ஆராய்ச்சிலாகே சுரத்திமல (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று சோதனையை மேற்கொண்டபோது டி -56 துப்பாக்கியொன்றும் – கட்டுத்துவக்கும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை (18) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.