தப்பியோடும் போது கைவிடப்பட்ட வானின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார்

அம்பாறை, தாலிபோட்டா ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட வான் கண்டி, அலவத்துகொடைப் பிரதேசத்திலுள்ள விகாரையொன்றைச் சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாண்டியடிக் கிராமத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (26) 03 பசுக்களை கடத்திச் சென்றுகொண்டிருந்த வானை சாகாமம் பிரதேசத்தில் நிறுத்துமாறு விசேட அதிரடிப்படையினர் சமிக்ஞை காட்டினர்.


இருப்பினும், அச்சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்றுகொண்டிருந்த அவ்வானின் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த வான் தாலிபோட்டா ஆற்றினுள் விழுந்ததுடன், அப்பசுக்களை கடத்தியோரும் தப்பிச்சென்றிருந்தனர்.

இந்நிலையில், வானிலிருந்த பசுமாடுகள் மூன்றும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்துகொண்டிருந்த நிலையில் அவற்றை அப்படையினர் காப்பாற்றிக் கரைசேர்த்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், குறித்த வானின் உரிமையாளரை அடையாளம் கண்டதாகவும்; பொலிஸார் கூறினர்.

தனது வானை கண்டியைச் சேர்ந்த ஒருவர் வாடகைக்குப் பெற்றதாகவும் அவரிடமிருந்து வான் கைமாறப்பட்டு மூன்றாவது நபரொருவர் தனது வானை வாடகைக்கு அமர்த்தியிருந்ததாக குறித்த பௌத்த மதகுரு, திருக்கோவில் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.