மாமியாரின் கத்தி வெட்டுக்குக்கு இலக்கான மருமகன் வைத்தியசாலையில் ! மாமி கைது.

எப்.முபாரக்

திருகோணமலை-புல்மோட்டை- சுனாமி வீட்டுத்திட்டப்பகுதியில் மாமியாரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அவரது மருமகன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கத்தி வெட்டுக்கு இலக்கானவர் அதே இடத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.சத்தியசீலன் (31 வயது) எனவும் தெரியவருகின்றது.



சம்பவம் குறித்து தெரியவருவதாகவது -கத்தியால் வெட்டிய மாமியாரின் மகள் வௌிநாட்டில் வேலை புரிந்து  வருவதாகவும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சனிக்கிழமை  (27) மதுபோதையில் மாமியாரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போதே  கோபம் கொண்ட மாமியார் கத்தியால் வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கத்தி வெட்டுக்கு இலக்கான மருமகன் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

கத்தியால் வெட்டியதாக சந்தேகிக்கப்படும்  மாமியாரான புல்மோட்டை-வீரந்தீவு-பகுதியைச்சேர்ந்த கனகசிங்கம் நாகம்மா (56வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாமியாரை இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்  ஆஜர்படுத்தவுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.