மட்டக்களப்பில் புகழ்பெற்ற அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 208 ஆவது வருடாந்த பெருவிழா வௌ்ளிக்கிழமை 16ஆம் திகதி பங்குத்தந்தை சீ.வி.அன்னதாஸ் அவர்களின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை 25ஆம் திகதி கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
இன்றைய இறுதி நாளன்று 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7மணிக்கு திருநாள் கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜேசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மேலும் இன்றைய தினம், போர்த்துக்கேயர் காலத்தில் அமைக்கப்பெற்றதாக கூறப்படும் கப்பலேந்தி மாதாவின் மிக பழமைவாய்ந்த கட்டடத்தினை பாதுகாக்கும் முகமாக அமைந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு மறை மாவட்ட ஆயர் ஜேசப் பொன்னையா ஆண்டகையால் திறந்துவைக்கப்பட்டது.
இப் பெருவிழாவின் இறுதி விஷேட நிகழ்வாக மட்டக்களப்பு வாவி ஊடாக இயந்திரப் படகு மூலம் கப்பலேந்தி அன்னையின் பவனியும் சிறப்புடன் இடம்பெற்றது.