ஏறாவூர் இரட்டைப் படுகொலை : கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

மட்டக்களப்பு -  ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (19) பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஏறாவூர் - முகாந்திரம் வீதியை அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 11ஆம் திகதியன்று, தாயும் மகளும்; கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடந்த சனிக்கிழமையன்று (17) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கயும் நேற்றுத் திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


இதன்போது, பொலிஸார்;, இச்சந்தேக நபர்களை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் அடுத்த 24 மணித்தியாலயங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு நீதவானிடம் கோரினர்.
இதையடுத்தே, இச்சந்தேக நபர்களை 24 மணித்தியாலயங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.