பெண் உயிரிழப்பு : காரில் கொண்டு வந்து வைத்தியசாலையில் சேர்ப்பித்த விற்பனை முகவர் தலைமறைவு

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணொருவர் சற்று நேரத்தில் உயிரிழந்த நிலையில் அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் சேர்ப்பித்த ஆண் தலைமைறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை அனுமதிக்கப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த பானு (வயது 27) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மர்மமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை, மருந்து மாத்திரைகள் விற்பனை முகவரான மலையகத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே தனது காரில் கொண்டு வந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை மோசமாகக் காணப்பட்டதால் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரவு 7.20 மணியளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த நபரின் கார் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்ற மட்டக்களப்பு பொலிஸ் சோக்கோ பிரிவினர் (மோப்ப நாய்ப் பிரிவினர்) தடயங்களை சேகரித்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு மற்றும் சோகோ பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், காரின் உரிமையாளரான தலைமறைவாகியுள்ள நபரையும் பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.