108 கிலோகிராம் மரை இறைச்சியுடன் மூவர் கைது

(எஸ்.கார்த்திகேசு)

108 கிலோகிராம் மரை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, சாகாமம் காட்டுப்பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக திருக்கோவில் பிரதேசத்திலுள்ள குளங்களில் நீர் அருந்துவதற்காக அக்குளங்களை நாடி மிருகங்கள் வருகின்றன. இவ்வாறு வரும் மிருகங்கள் வேட்டையாடப்படுவதாக தகவல் அறிந்த பொலிஸார் இது தொடர்பாக கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, காட்டுப்பகுதிக்கு சென்றபோது, மேற்படி மரை இறைச்சியுடன் மூன்று சந்தேக நபர்களையும் அழைத்து வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


மூவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 108 கிலோ மரை இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, மிருக வேட்டையில் ஈடுபடுவோர் உடனடியாக கைவிட வேண்டும் என்பதுடன் சட்டத்தை மதிக்காது மிருக வேட்டையில் ஈடுபடுவோருக்கு எதிராக மிக கடுமையாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் கூறினர்