கப்பம் பெற முயற்சித்தவர் கைது

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேனியில் தந்தை, மகள் இருவரை கடத்தி கப்பம் பெற முயற்சித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோவில்குடியிருப்பு - பனிச்சங்கேணி - வாகரையில் வசிக்கு செல்வநாயகம் துஷ்யந்தன் (28) என்பவரை ஐந்து பேர் சேர்ந்து,  வியாழக்கிழமை கடத்திச் சென்று, பணிச்சங்கேணி காட்டுப்பகுதி ஒன்றில் கட்டிவைத்து விட்டு துஷயந்தனின் அப்பாவுக்கு கையடக்க தொலைபேசி மூலம் 15 இலட்சம் ரூபாய் தருமாறு கப்பம் கோரியுள்ளனர்.

இதையடுத்து, ஐந்து இலட்சம் ரூபாயும் அந்த இடத்துக்கு சென்ற துஷ்யந்தனின் தந்தை செல்வநாயகம் என்பவரையும் கடத்தி மரத்தில் கட்டி வைத்து விட்டு மேலும் ஐந்து இலட்சம் ரூபாய் தருமாறு கப்பம் கோரியுள்ளனர்.


இந்த விடயம் வாகரை பொலிஸாருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் தெரியவந்ததையடுத்து, வாகரை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து இவர்களை தேடிக்கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பொன்னம்பளம் உதயநாதன் என்பவரை கைது செய்துள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

வெள்ளக்குட்டி தர்மகுமார் என்பவரின் தலைமையிலே இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.