பொதுமக்களை தெளிவுபடுத்தும் ,புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு



(துறையூர் தாஸன்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் தர நிர்வாகப் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு,2016.12.07 அன்று முற்பகல் 11.30 மணிக்கு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில்,வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட புற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் W.D.I சாமா குணதிலக்க அவர்கள், விசேட அதிதியாகவும் வளவளாளராகவும் கலந்துகொண்டார்.

விசேட புற்றுநோய் வைத்திய நிபுணர் சாமா குணதிலக்க,தனது விசாலமான உரையில் கருவில் அமைந்துள்ள குரோமோசோம்களின் மாறுதலானது அதன் சாதகமான வளர்ச்சியின் பெருக்கத்தில் மாறுதலை ஏற்படுத்தி புற்றுநோய்க் கலங்களை தோற்றுவிப்பதுடன் அசாதாரண கட்டுப்பாடான கலங்களின் பெருக்கமும் வளர்ச்சியுமே புற்றுநோய்க் கலங்களின் பிரதான இயல்பென்றும் இது உடலில் எப்பாகத்திலும் எவ் உறுப்பிலும் ஏற்படலாம் என்றும், சமுதாயத்தில் வயது முதிர்ந்த மக்களும் அனேகமாக பெண்களுமே புற்றுநோய்க்கு ஆளாகுவதுடன்,கடந்தகாலங்களில் மக்களின் வாழ்க்கை முறையிலும் சுற்றாடலிலும் ஏற்பட்ட மாற்றங்களுமே புற்றுநோய் அதிகரிப்பதற்கு முதன்மையான காரணம் எனவும் குறிப்பிட்டார்.


உதடு,வாய்,தொண்டை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,வாதநாளி புற்றுநோய்,குடல் மற்றும் குதப் புற்றுநோய்,நிணநீர்த் தொகுதி புற்றுநோய்,இரத்தப் புற்றுநோய்,முன்நிற்கும் சுரப்பி (PROSTATEGLAND) புற்றுநோய்,மூளைப்புற்று நோய் போன்ற புற்றுநோய்கள் ஆண்களை அதிகமாகவும் மார்பு புற்றுநோய்,கர்ப்பபை புற்றுநோய்,தைரொயிட் சுரப்பி புற்றுநோய்,குடல் மற்றும் குதப் புற்றுநோய்,நிணநீர்த்தொகுதி புற்றுநோய்,குருதிப்புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் பெண்களை அதிகமாக பாதிக்கின்றன என்றும்,பெண்களைத் தாக்கும் மிகப்பிரதான புற்றுநோயாக மார்பகப்புற்று நோய் பிரதான இடத்தை வகிக்கிறதெனவும் குறிப்பிட்டார்.
மார்புப் புற்றுநோயை சுய மார்புப் பரிசோதனையின் மூலம் மிக சுலபமாக ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கமுடியும் எனவும் சுய மார்புப் பரிசோதனையினை மாதத்திற்கு ஒரு தடவை மாதவிடாய் சக்கரம் ஏற்பட்டு 10 நாட்களின் பின் செய்யவேண்டும் எனவும் சுய மார்புப் பரிசோதனையின் போது ,மார்பில் குழி விழுதல்,தோடம்பழத்தோல் போல் மார்புத்தோல் மாற்றமடைதல்,மார்பில் ஏற்படும் ஆறாத காயங்கள் அல்லது வடுக்கள்,முலைக்காம்பில் ஏற்படும் மாறுதல்கள்,இரண்டு மார்பகங்களிலும் வேறுபாடு இருத்தல் மற்றும் மார்பில் கட்டிகள் இருத்தல்,தோல் மாற்றமடைந்து தடித்து இருத்தல்,இரு மார்பகமும் சமச்சீர் அற்று இருத்தல், மார்பின் மூலைக்காம்பின் ஊடாக திரவம் ஏதாவது வடிதல் போன்றன மார்பகப் புற்றுநோய்க்குரிய முக்கியமான அறிகுறிகள் எனவும் பரம்பரையில் மார்புப் புற்றுநோய் தோன்றிய பெண்கள்,30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்,சிறுவயதில்பூப்பெய்திய பெண்கள்,55 வயதிற்கு மேலும் மாதவிடாய் வெளிப்படுகின்ற பெண்கள்,பிள்ளைகள் அற்ற பெண்கள்,30 வயதுக்கு மேல் முதல் குழந்தை பெற்ற பெண்கள் ,உடற்பருமன் கூடிய பெண்கள்,அதிகளவு கொழுப்புப் பதார்த்தம் உண்ணும் பெண்கள் மற்றும் உடற்பயிற்சிகளை கடைப்பிடிக்காத பெண்கள் போன்றோருக்கு மார்புப் புற்றுநோய் மற்றும் ஏனைய புற்றுநோய்களும் தோன்றக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன எனவும், உடலுறவின் போதோ அல்லது உடலுறவின் பின்னரோ யோனிப் பகுதியின் ஊடாக இரத்தம் கசிதல்,இரு மாதவிடாய்களின் இடையில் அல்லது மாதவிடாய் நின்றுவிட்ட பின் இரத்தக் கசிவு ஏற்படல் போன்றன கர்ப்பபை கழுத்துப் புற்றுநோய்க்குரிய அறிகுறிகளென்றும் மிகவும் இளவயதில் உடலுறவு கொள்ளும் பெண்கள்,அதிகளவு பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள்,பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் பெண்கள் போன்றோர் கர்ப்பபை கழுத்துப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கர்ப்பபை புற்றுநோயை பெப் பரிசோதனையின் (PAP SMEAR) மூலம் ஆரம்பத்திலேயே இனங்கண்டு கொள்ளலாம் எனவும் ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையிலும், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் ஒரு தடவை  மாதர் நல கிளினிக்கில் (WELL WOMEN CLINIC) இலவசமாக மார்பகப் புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான பரிசோதனைகள் இடம்பெறுவதால் ஒவ்வொரு 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தவறாது பரிசோதித்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.
வாயில் ஏற்படும் வெள்ளைநிற பொட்டுக்கள்,வாய்க்குழியில் ஏற்படும் சிவப்பு நிற பொட்டுக்கள், நீண்டகால காயங்கள்,வாயை அசைத்தல்,திறத்தல்,உணவு மெல்லுதல் கடினமாதல் என்பன வாய்ப்புற்றுநோய்க்குரிய பிரதான அறிகுறிகளென்றும் வெற்றிலை,சுண்ணாம்பு,பாக்கு மெல்லுதல்,நீண்ட கால பற்சிதைவு,வாயினுள் ஏற்படும் காயங்கள்,புகைத்தல்,மது அருந்துதல் போன்ற பழக்கங்களை உடையவர்கள் வாய்ப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதுடன் புகைத்தல் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையையும் பெண்களுக்கு கருச்சிதைவையும் ஏற்படுத்துவதனால்,புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனையினை தவிர்ப்பதன் ஊடாக சுவாசப் புற்றுநோய்,குரல் வளைப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களில் மட்டுமல்லாது மேலும் பல நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம் என்றும் புகைத்தல்,மது அருந்துதல்,வெற்றிலை மெல்லுதல் போன்ற தீய பழக்கங்களை தவிர்ப்பதுடன் இரு மாதத்திற்கு ஒரு தடவையாவது உங்கள் வாயை சுயமாக பரிசோதித்து,அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால் மருத்துவரை உடனடியாக நாடி அதற்குரிய சிகிச்சைகளை பெற்றால் வாய்ப்புற்றுநோயை ஆரம்பத்திலேயே முற்றாக குணப்படுத்த முடியும் என குறிப்பிட்டார்.

தைரொயிட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்,குடல்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் தைரொய்ட் புற்றுநோயின் பாதிப்புக்கு ஆளாகுவர் என்றும்.பெரும்பாலும் இது 30 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்கு வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளதெனவும் சூலகப் புற்றுநோய்க்குரிய அறிகுறிகள் உடனடியாக தெரியாமல் இருப்பதால் அதை கண்டுபிடிப்பதற்கு காலம் ஆவதால் மிகவும் பாரதூரமாக இருக்குமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் உணவுப் பழக்க வழக்கம்,அதிகளவு கொழுப்பு அடங்கிய உணவு வகை, இறைச்சி வகை,உடனடி உணவுகள்,விலங்குப் புரதம்,பொதியிடப்பட்ட உணவுகளை உண்ணுதல்,குறைந்தளவு மரக்கறி வகைகளை உண்ணுதல்,மது மற்றும் சிகரெட் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டவர்கள்,பரம்பரையில் மிகவும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதித்து இருத்தல் போன்ற மேற்கூறிய காரணங்களால் அதிகளவு குடல் மற்றும் குதப் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களென்றும் இவற்றை முன்கூட்டியே கண்டுபிடித்தால் இலகுவாக குணப்படுத்தலாம் என்றும் சிறுநீர் செல்வதில் சிக்கல் உள்ளவர்கள்,தொடர்ந்து சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பவர்கள்,சிறுநீர் கழித்த பின்பும் சிறுநீர் இருப்பது போல் தோன்றுபவர்கள் போன்ற அறிகுறிகளுடன் வயது முதிர்ந்த ஆண்களுக்கு மாத்திரமே புறஸ்டேட் சுரப்பு புற்றுநோய் ஏற்படுமெனவும் குறிப்பிட்டார்.
குருதிப்புற்றுநோய் சிறுவர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் பெருமளவாக பாதிப்பதுடன் இப்புற்றுநோய் தீவீர நிலையை அடைந்த பின்னரே இதற்கான அறிகுறிகள் தென்படுவதால் சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக இருக்கும் இருமல்,குரலின் மாற்றம்,ஆறாத காயங்கள்,கட்டி ,உடம்பிலுள்ள மச்சங்கள் மற்றும் பாலுண்ணிகளில் திடீரென ஏற்படும் மாற்றங்கள்,அவைகள் பெரிதாகுதல்,மார்பகங்களில் அல்லது ஏனைய இடங்களில் கட்டி,கல்லு மாதிரி இருக்கும் தசைகள்,யோனியில் இருந்து வித்தியாசமாக வெளியேறுகின்ற இரத்தம் மற்றும் நீர் வெளியேற்றம்,மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படுகின்ற மாற்றங்கள் அல்லது இரத்தம் வெளியேறுதல்,தொடர்ச்சியாக இருக்கின்ற மாதவிடாய் மற்றும் தொண்டையில் இறுக்கம்,எந்த ஒரு காரணமும் இல்லாமல் உடம்பு மெலிவடைதல் மற்றும் அருவருப்புத் தன்மை போன்றன புற்றுநோய்க்குரிய பொதுவான அறிகுறிகளெனவும் இவற்றில் ஏதேனும் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை நாடுவதன் மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை பெறலாம் எனவும் கூறினார்.
உதடு,வாய்,தொண்டை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,வாதநாளி புற்றுநோய்,குடல் மற்றும் குதப் புற்றுநோய்,நிணநீர்த் தொகுதி புற்றுநோய்,முன்நிற்கும் சுரப்பி புற்றுநோய்,மூளைப்புற்றுநோய்,மார்புப்புற்றுநோய்,கர்ப்பபை புற்றுநோய்,தைரொயிட் சுரப்பி புற்றுநோய்,குருதிப்புற்றுநோய் போன்ற புற்றுநோய்களுடன் 200 புற்றுநோய்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 1000 க்கும் மேற்பட்ட வாய்ப்புற்று நோயாளர்கள் தங்களின் நிலையினை அறிந்து வெளியுலகுக்கு வராமல் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் வலயக்கல்வி அலுவலர்கள்,பிதேச செயலக அலுவலர்கள், பாடசாலை அதிபர்கள்,சமூக நலன்விரும்பிகள்,சமூக ஆர்வலர்கள்,சமூகத்தில் வேலை செய்பவர்கள்,போன்றோர் ஏதேனும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் ஊடாக நிதியுதவு பெற்று புற்றுநோய் சார்ந்த படங்களை பொது இடங்களில் மற்றும் ஆரம்ப பாடசாலைகளின் வெனர்களில் காட்சிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எமது வருங்கால இளம் சந்ததியினரை புற்றுநோயில் இருந்து முறையாக பாதுகாத்துக்கொள்ளலாம் என கூறி தனது பரந்த உரையை நிறைவுசெய்தார்.

இக்கருத்தரங்கு நிகழ்வில் பொதுமக்கள் , வைத்தியசாலை அபிவிருத்திக்குழு தலைவர்,உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கானது மிகவும் போதியளவு விளக்கத்துடனும் பயனுள்ளதாகவும் இருந்தது எனவும், விசேட புற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் W.D.I சாமா குணதிலக்க அவர்களுக்கு கலந்து கொண்டவர்களின் சார்பில் மேன்மேலும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று, வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் உறுப்பினர் தனது கருத்தினை முன் வைத்திருந்தார்.

இக்கருத்தரங்கின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்குமான அதாவது விசேட புற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் W.D.I சாமா குணதிலக்க அவர்களின்; ஆங்கில உரைகளை தரமுகாமைத்துவப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் N. ரமேஸ் அவர்கள் சிறப்பாக தமிழ்மொழிபெயர்ப்பு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொற்றா ஆட்கொல்லி நோயான புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் ஏற்படுத்தியமைக்காக,அவர் ஆற்றிய பணியினை கௌரவித்து ,விசேட புற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் W.D.I சாமா குணதிலக்க அவர்களுக்கு, வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

இக்கருத்தரங்கு வெகுசிறப்பாக இடம்பெற்று நிறைவுபெறுவதற்கு பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும்,தர நிர்வாகப் பிரிவுன் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் ச.ஸ்ரீகரன் நன்றியுரை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.