15 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் பிள்ளையான்; மேலும் இரு வாரம் நீடிப்பு!

(சுபஜன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(23) திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும்   முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை மாவட்ட நீதிவானும் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான எம்.முகைதீன் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு தேவாலயமொன்றில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.