கிழக்கில் விரைவில் 4 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்புக்கள்-கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 4 ஆயிரம் பேருக்கான  வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களே இவ்வாறு நிரப்பப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்  சுட்டிக்காட்டினார்,

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

பாடசாலைகளில் நிலவும் காவலாளி வெற்றிடங்கள்,நூலக உதவியாளர்கள் மற்றும் காரியாலய உதவியாளர்கள் போன்றவற்றுக்கு 1000 வெற்றிடங்கள் உள்ளதுடன் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதுடன் மேலும் அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,


இன்று மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் குறுகிய அதிகாரப் பரப்புக்குள் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே பல விடயங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளதுடன் மக்களுக்காக எவ்வாறான சவால்களையும் சந்திக்கத் தயாரெனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,

பல வருடங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்று  பல்கலைக்கழகங்களிலிருந்து வௌியாகும் பட்டதாரிகள் தொழில்வாய்ப்புக்களின்றி மேலும் சிரமங்களை எதிர்நோக்குவது வேதனையளிப்பதாக உள்ளதுடன் கணிசமான பட்டதாரிகளை அரச தொழிற்துறையில் விரைவில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் கூறினார்,

கடந்த ஆட்சியாளர்கள் கிழக்கின் அரச தொழிற்துறையில் இருக்கும் வெற்றிடங்களை சரியாக அடையாளங்காணாமையும் அதற்கு பட்டதாரிகளையும் ஏனையவர்களையும் உள்வாங்குவதற்கான பொறிமுறையொன்றுக்கான அடித்தளத்தை இடாமையுமே இதற்கான காரணமாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

கடந்த ஆட்சியில் வாய்மூடி மௌனமாக இருந்து சுகபோகங்களை அனுபவித்து விட்டு இன்று கிழக்கின் பல்வேறு துறைகளுக்கும் அபிவிருத்தியை பெற்றுக் கொடுக்க நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை இடுபவர்களாகவே  கடந்த ஆட்சியின் அமைச்சர்கள் உள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,
மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரத்தை  வழங்கும் பட்சத்தில் மத்திய அரசாங்கத்தை விட இரட்டிப்பு செயற்திறனுடன் மாகாண சபைகளும்  இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்,

தமக்கு எவ்வாறான சவால்களும் நெருக்கடிகளும் வந்த போதிலும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒரு விடிவுகாலத்தையும் ஏனைய வெற்றிடங்களை நிரப்பி கிழக்கின் வேலையில்லாப் பிரச்சினைக்கு விரைவில் விடிவினை வழங்கவும் முழு முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.