லீசிங் முறையில் வாகன கொள்வனவிற்கான புதிய நடைமுறை அறிமுகம்

2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட புதிய குத்தகை நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, லீசிங் முறையில் முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்யும்போது ஆரம்பக் கட்டணமாக 75 வீதத்தை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தல் நடைமுறையொன்று அவசியம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதற்கமைய, இதுவரை காலமும் 10 வீதத்தை ஆரம்பக் கட்டணமாக செலுத்தி முச்சக்கரவண்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பம் மாற்றப்பட்டுள்ளது.

இதனைத் தவிர கார்கள் மற்றும் வேன்களை கொள்வனவு செய்யும்போது 50 வீதத்தையும் லொறிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போது 90 வீதத்தையும் ஆரம்பக் கட்டணமாக செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்காக நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைய, லீசிங் முறையில் வாகன கொள்வனவிற்கான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.